Monday 2 July 2012

மரு.கான்ஸ்டான்டைன் ஹெர்ரிங்

 
மரு. .கான்ஸ்டான்டைன் ஹெர்ரிங்
தோற்றம்: 01-01-1800
மறைவு: 23-06-1880

உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடும் பொழுது ஒவ்வொரு ஹோமியோபதியருக்கும் நினைவுக்கு வருவது மாபெரும் மருத்துவர் ஹெர்ரிங்  அவர்கள் தான்.  ஆம் !  19 ஆம் நூற்றாண்டில் , அமெரிக்காவில் ஹோமியோபதியை முழுவீச்சில் செயல் படுத்தியதால்        "அமெரிக்க ஹோமியோ மருத்துவத்தின் தந்தை " என்று இவர் அழைக்கப்படுகிறார்.   . இவர் ஹோமியோபதிக்கு வந்தது மிகவும் சுவாரசியமான  கதை.

ஹெர்ரிங் தமது 17 வது வயதில் மருத்துவம் பயிலுவதற்காக  "  சர்சிகல் அகாடமி அப் டிரிஸ்டன் ”  இல் சேர்ந்து படிப்பு முடிந்தவுடன்  கி.பி 1820 இல் லீப்சிக் பல்கலைகழகத்தில் சேர்ந்தார். அங்கே அவருக்கு ஆசிரியராக இருந்தவர் பிரபல மருத்துவ சிகிச்சை நிபுணர் மரு. ஹென்ரிச் ராபி.  இவர் மாமேதை ஹானிமனுக்கும்  அவரின் கண்டுபிடிப்பான ஹோமியோபதிக்கும் கடுமையான எதிரியாகத் திகழ்ந்தவர்.

கி.பி 1821 இல்  மாமேதை ஹானிமன் ஹோமியோபதியை தீவிரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் போது அதற்கு இணையாக கடுமையான எதிர்ப்பும் வலுத்திருந்தது . லீப்சிக் நகரின் பிரபல பத்திரிக்கையாளர் திரு.பாம் கார்ட்னர்   ( C.BAUMGARTNER)  ஹோமியோபதியை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில் ஒரு புத்தகம் எழுதுமாறு  மரு.ராபியை அணுகினார். அவருக்கு நேரம் இல்லாத காரணத்தால் அப்பணியை அவரின் சிறந்த மாணவரான ஹெர்ரிங் வசம் ஒப்படைத்தார்.   மகிழ்ச்சியுடன் அப்பணியை ஏற்றுக்கொண்ட ஹெர்ரிங் , ஒன்றைப்பற்றி விமர்சிக்கும் முன்பு அதைப் பற்றிய ஆழ்ந்த ஞானம் இருக்க வேண்டும் என்ற தமக்கே உரிய சிறப்பு குணத்திற்கு இணங்க ஹோமியோபதி செயல்படும் விதம் பற்றியும் அதன் தத்துவார்த்த பின்னணி பற்றியும் கற்க ஆரம்பித்தார்.


மாமேதை ஹானிமனின் கட்டுரைகளையும் , மருந்து நிருபணங்களையும் சேகரித்து நுணுக்கமாக ஆராய்ந்தார்சின்கோனா ( CHINA ) மருந்தினை உட்கொண்டு மறுபடியும் நிருபணம் செய்து ஹானிமனின் பரிசோதனை சரிதான் என்று உறுதியும் செய்தார். ஹோமியோபதியின் மேல் அவருக்கு திருப்தியும் நம்பிக்கையும் ஏற்பட்டது. ஹோமியோபதிக்கு எதிராக எழுதுவதற்கு எந்தக் கருதும் இல்லாமல் போய்விட்டது. இத்தருணத்தில் ஹெர்ரிங் அவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமாக ஒரு நிகழ்ச்சி நடந்தது .


கி.பி. 1824 இல்  ஹெர்ரிங் ஒரு சவத்தை அறுத்து பரிசோதனை செய்த பொழுது அவரது வலது கை கட்டைவிரலில் காயம் ஏற்பட்டு, பின்னர் சீழ்பிடித்து கடுமையான புண்ணாக மாறிவிட்டது. அவரது காயத்தைப் போக்கும் ஆற்றல் எந்த பாரம்பரிய மருந்திற்கும் ( அலோபதி)  இல்லாமல் போய்விட்டது. அவரது கட்டைவிரலை எடுக்க வேண்டிய நிலை. அச்சமயத்தில் ஹானிமனின் மாணவர்களில் ஒருவரான மரு . .கும்மர் ( kummer)  ஹெரிங்கை பரிசோதித்து சரியான ஹோமியோபதி மருந்தான  ஆர்சனிகம் ஆல்பத்தை கொடுத்தார். சில வேலை மருந்து உட்கொண்ட பின்னர் காயம் முழுமையாக நலமாகி குணமடைந்தார். அவரது கட்டைவிரல் காப்பாற்றப்பட்டது.


இந்நிகழ்ச்சி ஹெர்ரிங் அவர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தையும், ஹோமியோபதியின் மீது ஆர்வத்தையும் ஏற்படுத்தியது . உடனடியாக தான் ஹோமியோபதிக்கு மாறிவிட்டதாக அறிவித்தார். கி.பி.1826 இல் லீப்சிக் பல்கலைகழகத்தில் மருத்துவப் பட்டம் பெறும்போது அவர் சமர்பித்த " எதிர்காலத்திற்கான மருந்துகள் " ( On the medicine of the future) என்ற ஆய்வுக் கட்டுரை ஹெர்ரிங்  ஹோமியோபதிக்கு முழுமையாக மாறிவிட்டதை உறுதி செய்தது.  அதன் பின்னர் நடந்தவைகளை உலகமே அறியும். ஆம்! லாச்சசிஸ் தொடங்கி காந்தாரிஸ், கோல்சிகம், மெசீரியம், சோரினம், ஆபிஸ், ஜெல்சீமியம் போன்ற 72  மருந்துகளை நிருபணம் செய்தார் மரு.ஹெர்ரிங்.

கி.பி. 1833 இல் அமெரிக்கா சென்று அங்கே பிலடெல்பியாவில் தங்கினார். கி.பி.1848 இல் " ஹானிமன் மருத்துவக் கல்லூரி"யை தொடங்கி தமது மருத்துவ சேவையினை தொடர்ந்தார். இக்கல்லூரியே உலகம் முழுவதுமுள்ள ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகளில் மிகச் சிறந்தது என்று இன்று வரை கருதப்படுகின்றது. ஹெர்ரிங் மற்றும் அவரது மாணவர்களும் சேர்ந்து ஆண்டிற்கு 50000 துயரர்களை நலமடைய செய்ததோடு மட்டுமல்லாமல்  3500 ஹோமியோபதியர்களையும் உருக்காகினார்கள். மரு. ஹெர்ரிங் தமது அனுபவங்களையும் , மருந்துகளையும் " வழிகாட்டும் குறிகள் " என்ற தலைப்பில் (Guiding Symptoms) பதிவு செய்ய ஆரம்பித்தார். அவை, " மருந்துகாண் ஏட்டின் வழிகாட்டும் குறிகள் " என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகள் கி.பி. 1879 இல்    வெளிவந்தன. மற்ற எட்டு தொகுதிகளும் அவரது மாணவர்களால் கி.பி.1891 இல்  அவரது மறைவிற்குப் பிறகே வெளியிடப்பட்டன.

ஹெர்ரிங் மிகவும் நேர்மையான குணத்திற்குக் சொந்தக்காரர் . தமது கடமையில் சரியாக இருக்கவேண்டும் என்று நினைத்தவர். கி.பி. 1880 இல் அதாவது  23/06//1880 ந் தேதி  தான் இறப்பதற்கு சில மணித்துளிகளுக்கு முன்பு வரை கொட்டும் பனியில்  ஒரு இதய நோயாளியை பார்த்துவிட்டு வந்து  இரவு பத்து மணிக்கு மேல் இறந்தார் எனபது நெஞ்சை நெகிழச்செய்யும் செய்தி. இத்தகைய மகத்தான பணியினை செய்த மரு.ஹெர்ரிங் அவர்களுக்கு ஹோமியோபதி உலகம் என்ரெண்டும் நன்றிக்கடன் பட்டுள்ளது. அவருக்குமட்டுமல்ல.  அவரை ஹோமியோபதிக்கு தாரை வார்த்த    மரு.ராபிக்கும் சேர்த்துதான்.

No comments:

Post a Comment