Wednesday 1 June 2016

செருமல் + இருமல்

ஆண் துயரர் திரு. எஸ். வயது 48. ஹோமியோபதியின் மேல் மிகுந்த நம்பிக்கை உள்ளவர். அவருக்கு  மூன்று மாதங்களாக செருமல் + இருமல். குரல்வளையில் ஏதோ அடைத்துக் கொண்டுள்ளது போன்ற உணர்வு என்று தெரிவித்தார். அத்தோடு இறுக்கிப் பிடித்து கொண்ட மாதிரி இருக்கிறது என்றார். குரல்வளையில் இருந்து இரைப்பை வரை எரிச்சலும் உண்டு.  பேசும் போது இருமல் அதிகரிக்கும். மூன்று மாதங்களாக ஹோமியோபதி மருந்துகள் தான் எடுத்திருக்கிறார். இருந்தாலும் நலம் ஏற்படவில்லை. இவர் கஷ்டப்படுவதைப் பார்த்து அவர் மணைவிக்குக் கோபம் வந்து விட்டது. பேசாமல் அலோபதி மருந்து எடுத்துக் கொண்டு நிம்மதியாக இருக்க வேண்டியது தானே!. இல்லையென்றால் மருத்துவரை மாற்றுங்கள் என்று அர்ச்சனை. மனிதர் வெறுத்துபோய் வேறு வழியில்லாமல் இப்போது என்னிடம் வந்திருக்கிறார்.

இந்த மாதிரியான சூழ்நிலையில் , துயரரின் தொல்லைகளுக்கு ஏதாவது காரண காரியங்கள் இருக்கிறதா என்று விசாரிப்பது என் வழக்கம். விசாரித்த பொழுது மூன்று மாதங்களுக்கு முன்பு அவரது தந்தை இறந்து விட்டதாக கூறினார். ஆகா ! கிடைத்து விட்டது மருந்து ! என்ற மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. ஆனால், அந்த சந்தோசம் நீண்டநேரம் நீடிக்கவில்லை. துயரர் அதெல்லாம் என்னை பாதிக்கவில்லை என்றார். சிரித்துக் கொண்டேன் . அடுத்து , அவர் தந்தை இறந்த பிறகு நடை பெரும் சடங்குகளுக்காக இரண்டு மூன்று முறை தலை வழியாக குளித்திருக்கிறார். இவற்றைத் தவிர மனக் குறிகள் எதுவும் பெரிதாக தெரியவில்லை. ஆனால் செருமல் அவரை தொடர்ந்து சிரமப்படுத்தி உள்ளது. இந்த மாதியான சூழலில் எனக்கு பெரிதும் நம்பிக்கை அளிப்பது மரு.S.R பதக் அவர்களின் மருந்துகாண் ஏடு தான். அதன்படி துயரின் குறிகளை கீழ்வருமாறு தொகுத்தேன்;

Rubrics:

COUGH, TALKING < ( SRP PAGE 82) 
THROAT, CHOKING, CONSTRICTION, SPASM NARROW ( SRP PAGE 397)
THROAT PIT ( SRP PAGE 402)
COUGH, THROAT OR LARYNX FROM ( SRP PAGE 82)

மருந்துத்தேர்வு: ருமெக்ஸ்-30 ( tds).

மேற்கண்ட குறிகளின் அடிப்படையில் ருமெக்ஸ் 30 , மூன்று தடவைகள் ( காலை/இரவு/காலை ) கொடுத்து அனுப்பினேன். ஒரு வாரத்தில் துயரரின் இருமல் குறைந்து விட்டது. ஆனால் துயரருக்கு  முழுவதும் குணமடைந்த உணர்வு ஏற்படவில்லை. அதனால் ருமெக்ஸ் 30 வது வீரியத்தில் திரும்பவும் ஒரு தடவை கொடுத்தேன். அடுத்த ஒரு வாரத்தில் துயரர் முழுமையாக குணமடைந்து விட்டார்.