Monday 20 November 2017

ஹோமியோபதியில் கட்புலனுக்கு அகப்படாதவற்றைக் காணும் திறன் அல்லது மனக்கண் தொலைக்காட்சி (CLAIRVOYANCE)-2

ஹோமியோபதியில் கட்புலனுக்கு அகப்படாதவற்றைக் காணும் திறன் அல்லது மனக்கண் தொலைக்காட்சி (CLAIRVOYANCE)

பகுதி- இரண்டு.


மனக்கண் தொலைக்காட்சிக்கு உள்ளாகும் துயரருக்களுக்கான மருந்துகள்:

லாக்கஸிஸ் : மனித சக்திக்கு அப்பாற்படட பலம் வாய்ந்த ஒரு சக்தியின் பிடியில் (கடவுள்) தான் இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.  மதம் சம்பந்தமான விஷயங்களில் மிகவும் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு தீர்க்கதரிசனம் சார்ந்த கனவுகள் வரும். தன் நினைவு இழந்த நிலையில் காணப்படுவார் ( சமாதிநிலை). அதிகமாக பேசும் தன்மை உடையவராக இருப்பர். ஒரு விஷயத்தைப் பேச ஆரம்பித்தால் முடிக்க மாட்டார்; அடுத்த பொருளுக்கு தாவி விடுவார். நம்மை பேச விடாமல் அவரே பேசிக் கொண்டிருப்பார். மிகவும் பொறாமைக்குணம் படைத்தவர். தனது கணவருக்கு , பிற பெண்களிடம் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகம் கொள்பவராக இருப்பார்.  

கிராட்டுலஸ் காஸ்கேவெல்லா: தனக்குப்பின்னே யாரோ இருப்பது போன்ற பிரமை இருக்கும்  அல்லது காலடி சப்தங்கள் கேட்கும். தான் ஒரு அரக்கன் போல் செத்துக்  கிடப்பதாகவும் , கருப்பு எலும்புக்கூடாக கிடப்பதாகவும் இவர்களுக்கு மாயத்தோற்றம் ஏற்படும். தான் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாக இவர்கள் நினைப்பார்கள் .

நாஜா: மனித சக்திக்கு அப்பாற்படட பலம் வாய்ந்த ஒரு சக்தியின் பிடியில் (கடவுள்) தான் இருப்பதாக  நினைத்துக் கொள்வார்கள். பிடிவாதமான மதக் கோட்ப்பாட்டைப் பின்பற்றுவார் . தனது கடமையிலிருந்து  தவறி விட்டோம்  அல்லது தவறு செய்து விட்டோம் என்ற பிரமை இருக்கும். அதே போல் தான் தவறாக தண்டிக்கப்பட்டு விட்டோம் அல்லது தவறான பழியை சுமக்கிறோம் என்ற பிரமையும் இருக்கும்.  

லைசின்: இவர்,  மற்றவர்களுக்கு பயங்கரமான கெடுதலும் அத்தோடு பிரார்த்தனையும் செய்வார். தான் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறோம் என்று கருதுவார். நாஜா மருந்து போலவே இவருக்கும் , தனது கடமையிலிருந்து  தவறி விட்டோம்  அல்லது தவறு செய்து விட்டோம் என்ற பிரமை இருக்கும். தன்னை நம்பியவரை பாதுகாக்க முடியாதோ என்ற பயம் தோன்றும். கடும் கோபமும் அதனைத் தொடர்ந்து கழிவிரக்கமும் ( அல்லது சமாதானமும்) ஏற்படும் குணம் படைத்தவர்களாகவும் இருப்பார்கள்.

அகோனைட்:    பயம் இம்மருந்தின் முக்கியமான குறி ஆகும் . இறந்து விடுவோமோ என்ற பயம், கூட்டங்களைக் கண்டும், வெளியே போகவும், எதைக்கண்டாலும்   பயம்.  இவர்களுக்கு தலை நிரம்பின மாதிரியும், கனமாகவும் , கண் எரிச்சலுடனும்  , குத்துகிற வலியுடன் இருக்கும். அதிக கவலையுடனும் ,   அமைதியின்மையுடனும் இத்  துயரர்கள் இருப்பார்கள். பயமும் , பதட்டமும்   இம்மருந்தின் சாரமாக இருக்கும். தீவிர நோய்த் தாக்குதலின் போது , தான் இந்த நாளில் , இந்த நேரத்தில் இறந்து விடுவேன் என்று கூறுவார்கள்.

அன்ஹோலோனியம்: அனைத்து உயிர்களிலும் தான் இணைந்துவிட்டது போன்று அல்லது ஒன்றாகி விட்டது போன்ற உணர்வு இவர்களிடத்தில் இருக்கும். மனிதர்களின்  பழகும் தன்மையையும் எல்லையையும் வேறுபடுத்திக் கொள்ளமுடியாமல் தவிப்பார். மக்களை ஐக்கியப்படுத்துவதிலும்    அல்லது ஒற்றுமைப்படுத்துவதிலும் ஈடுபடும் இவருக்கு விசித்திரமான அனுபவங்கள் கிடைக்கும்.   அத்துடன் தான் தனியாகிவிட்டது போன்ற உணர்வும் , னது அடையாளத்தை இழந்துவிடுவோம் என்ற பயமும் இருக்கும்.

கன்னாபிஸ் இண்டிகா:  இவர் மனதில்  மாய உலகத்தில் வாழ்பவர் . கூடவே பயங்களும் இருக்கும்.  மற்றவர்களின் கடுமையான செயல்களும் அல்லது   ஆபத்தும் இவரை மிகவும் பாதிக்கும். எப்போதும் பரவச நிலையிலேயே இருப்பர். இவருக்கு நிறைய மாயத்தோற்றங்கள்  ஏற்படும். குறிப்பாக  கஞ்சாப்புகைக்கும் பழக்கமுள்ள பல இந்தியத் துறவிகளுக்கு இது பொருத்தமான மருந்து. எப்போதும் மேன்மையான உணர்வோடும் , சந்தோச மனநிலையோடும் இருப்பார்கள்.   


ஸ்ட்ராமோனியம்:  இவர்களுக்கு இருட்டைக்   கண்டால் மிகவும் பயம் ( குழந்தைகளுக்கு முதன்மையன் மருந்து) . தனியாக இருக்க பயம்;  மற்றும் காட்டு விலங்களுக்கு பயம். யாராவது அருகில் இருக்க வேண்டும் என்று விரும்புவார். இம்மருந்தை பயங்களின் அரசன் என்றே குறிப்பிடலாம். ஆன்மீகக் கோட்பாட்டாளர். இரவெல்லாம் ஆண்டவனைப் பிரார்த்தனை செய்வார். அதுமட்டுமல்லாமல் ஆன்மீகம்/ வேதப் புத்தகங்களை படிக்க விரும்புவார்.  பேய்கள் , ஆவிகள் இவர்களது கண்களுக்குத் தெரிவதாக கூறுவார்கள். இரவில் படுத்தவுடன் தான் இறந்துவிட்டோம் அல்லது தனது உடம்பை பிணம் என்று விசித்திரமான உணர்வு தோன்றும். அதனால் இரவில் விளக்கை போட்டுக்கொண்டு தான் தூங்குவார். யாருடனாவது சேர்ந்து இருக்கவே (பாதுகாப்பாக) இவர்களுக்கு பிடிக்கும்.

ஹயாசியாமஸ்   :  இவர்கள் முட்டாள்தனமாக சிரிப்பவர்களாகவும்  மற்றும் அத்தகைய செயல்களை செய்ப்பவர்களாகவும்  இருப்பார்கள். பொது இடங்களில் தங்களது பிறப்புறுப்பை காட்டுவதில் இவர்களுக்கு எந்த வெட்கமும் இருக்காது. வீட்டிற்குள் அல்லது தங்களது அறையில் ஆடையை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக நடமாடுவார்கள். நிர்வாணமாக இருப்பதையே இவர்கள் விரும்புவார்கள். குழந்தைகள் , வயதிற்கு மிஞ்சிய புத்தியுள்ளவர்களாகவும் , காம உணர்வு மிகுந்தவர்களாகவும் இருப்பார்கள். கணவன்/மனைவி தங்களுக்கு உண்மையாக நடந்து கொள்ளவில்லை என்ற பிரமை இருக்கும் ( ஸ்ட்ராமோனியம் )

அனகார்டியம் :  இவர்கள் இரண்டு விதமான மனநிலை படைத்தவர்கள். ஒரு தோளில் தேவதையும் , மற்றொரு தோளில் பிசாசும் அமர்ந்து கொண்டு தன்னை வழி நடத்துவதாகக் கூறுவர். மிகவும் குரூரமான மனநிலை படைத்தவர்கள். மனித சக்திக்கு அப்பாற்படட பலம் வாய்ந்த ஒரு சக்தியின் பிடியில் (கடவுள்) தான் இருப்பதக்க நினைத்துக் கொள்வார்கள். தான் இறந்து விட்டது போன்றும்; சொர்க்கத்தில் இருப்பதுபோன்றும், பேய், பிசாசுகள் கண்ணுக்குத் தெரிவதாகவும் ; தனக்குள் இன்னொருவன் இருப்பது ( SPILIT PERSONALITY) போன்றும் பல மாயத்தோற்றங்கள் இவர்களுக்கு ஏற்படும்.  


நக்ஸ் மாசட்டா: இவர்கள்,  தங்களுக்கு  தீர்க்கதரிசனம் ஏற்படுவதாகக் கூறுவார்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதையும் கணித்துக் கூறுவார்கள். ஆனால், அப்படிச் சொன்னதையே  மறந்தும் விடுவார்கள்.  இவர்களுக்கு தூக்கநிலையும், கனவில் இருப்பது போன்றும் மற்றும் மயங்கி விழும் தன்மையுடையவர்களாகவும் இருப்பார்கள். தனக்கு இரண்டு தலை இருப்பது போன்ற பிரமை இருக்கும்; குறிப்பாக தலைவலி ஏற்படும் போது இந்த உணர்வு தோன்றும்.


பாஸ்பரஸ்: இவர்கள் மிகவும் இரக்க சுபாவம் உள்ளவர்கள். மற்றவர்களின் துன்பம் இவர்களை மிகவும் பாதிக்கும் . தனது உறவினர்களுக்கோ அல்லது தனக்கோ ஏதாவது  விபத்து நடந்து விடும் என்ற பிரமை இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். இவர்களது காதுகளில் பல்வேறு சப்தங்கள் கேட்க்கும். மற்றவர்களின் மனதை ஊடுருவிப் பார்க்கும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும். அதனால் ஆவிஉலகத்துடன் தொடர்பு கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும் (MEDIUM). மருத்துவர் M.L. டெய்லர்  துயரர் ஆய்வின் போது, நோயாளிகளின்  உணர்வை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் தன்மைபடைத்தவராக இருந்திருக்கிறார். அதனால் , அந்தத் துயரருக்கு என்ன மருந்து கொடுக்கிறாரோ அம்மருந்தை அவரும் சிலசமயம் எடுத்துக் கொள்வார் என்று பதிவு செய்திருக்கிறார்கள்.  

சிலிகா : இவர் மிகவும் பண்பட்டமனிதராகவும் அதேசமயத்தில் தன்னம்பிக்கை குறைந்தவராகவும் இருப்பர். இரக்கச் சுபாவமும் , வெட்கமும் இருக்கும். மிகவும் பிடிவாதக்குணம் படைத்தவர்கள். திருடர்கள், பேய்-பிசாசுகள் மற்றும் புழு,பூச்சிகளைப் பார்ப்பதாக பிரமை இருக்கும். அதேபோல் தனக்குப் பின்னே யாரோ இருப்பது போன்றும் , தன்னைத் துரத்துவதாகவும் மாயத்தோற்றம் இவர்களுக்கு ஏற்படும்.

மெடோரினம்: இவருக்கு வாழ்க்கை  கனவில் மிதப்பது போல் தோன்றும். கனவுகளில் நிறைய மனக்கண் தொலைக்காட்சிப் பதிவுகள் தெரியும். பேய் பிசாசுகளின் மேல் பயம் இருக்கும். தனக்குப்பின்னால் யாரோ இருப்பது போலவும் தோன்றும். தனக்கும் , மற்றவர்களுக்கும்  ஏதாவது கெடுதல் நடக்கும் என்று முன்கூட்டியே சொல்லுவார். அதேபோல் சிலசமயம் நடந்துவிடும் பொழுது அவர்களுக்கு பயமும் ஏற்படும்.  எதிர்காலத்தை  அல்லது வேறெங்கோ நடக்கப்போவதை சரியாக, காட்சிப்படுத்தி  கணித்துக்கூறும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும்;  அது  மிகச் சரியாகவும் நடக்கும். அதனால் மனக்கண் தொலைக்காட்சி பாதிப்புத் துயரர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து.    

மேற்கண்ட மருந்துகளைத் தவிர மற்ற மருந்துகளையும் , அதன் விசித்திரமான தனிப்பண்பு குறிகளின் மூலம்  வேறுபடுத்தி தெரிந்து கொள்ளுங்கள்.


பொதுவாக மனக்கண் தொலைக்காட்சி உணர்விற்கு ஆட்படுபவர்களுக்கு கீழ்க்காணும் துணைக்கூறுகளும் இருக்கும்.

1.          கவனக்குறைவு (ABSENTMINDED)
2.          உளப் பொருள்களிலிருந்து மனம் விலகியிருத்தல்.
             ( ABSTRACTION OF MIND).
3.          ஒன்றை நினைத்து ஏங்குதல் (BROODING)
4.          தன்னுள்ளத்தைத் தானே நுணுகிக்காணும் செயல் ( INTROSEPTION)
5.          இறப்பைப்பற்றி முன்னறிவித்தல் அல்லது வரும்தீங்குணர்தல்.
             ( PRESENTIMENT OF DEATH)
6.          பொருள்கள் வித்தியாசமாகத் தெரியும்  (THINGS SEEM STRANGE).

இக்குறிகள் அனைத்தும் ஒரே துயரரிடம் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் சிலகூறுகள் கட்டாயம்  இருக்கும். இவற்றையும் நாம் நுணுக்கமாகக் கவனித்து அவர்களுக்குரிய மருந்தைத் தேர்வு செய்ய வேண்டும்.  இத்தகைய மனக்கண் தொலைக்காட்சிக்கு உட்ப்படும் துயரர்களை நலப்படுத்த   நாம் உளஆற்றல்வசியத்தை  ( MESMERISM) பயன்படுத்தலாம் என்று    மாமேதை ஹானிமன்  தமது ஆர்கனான் நூலில் ,  மணிமொழிகள்  288-289 களில் குறிப்பிடுகிறார்.  

மருத்துவர்கள் ஜாஹ்ர், (DR.JAHR) ஹார்ட்மென் (DR.HARTMANN), ஹெம்பெல் (DR.HEMPEL) மற்றும் எல்லிக்ட்ஸோன் ( DR. ELLICSTON) போன்றவர்கள் இந்த மனக்கண் தொலைக்காட்சி பற்றியும் , உளஆற்றல்வசியம் பற்றியும் ஆய்வு  செய்து “ஹோமியோபதி  நேரங்கள்” (விவாதங்கள்) என்ற நூலில், பகுதி – I இல் பதிவு செய்து இருக்கிறர்கள் ( HOMEOPTHIC TIMES , VOLUME-1 PAGES 758-761).   

மரு.  எல்லிக்ட்ஸோன், உளஆற்றல் வசியம் ( MESMERISM) மூலம் மனக்கண் தொலைக்காட்சிக்கு உள்ளாகும் பல துயரர்களை தூக்கத்தில் ஆழ்த்தி நலப்படுத்தியதாக பதிவு செய்திருக்கிறார் . உளஆற்றல்வசியத்தை ஒரு மருந்தாகவே கருதலாம் என்று மரு.ஹெம்பெல் அவர்களும்  தமது “HOMEOPATHIC PHARMACOPOEIA”  நூலில் தெரிவித்திருக்கிறார். ஆகவே, மனக்கண் தொலைகாட்சிக்கு ( CLAIROVOYANCE) ஆட்படும் துயரர்களை , அவர்களின் குறிகளுக்குத் தகுந்தவாறு ஒத்த ஹோமியோபதி மருந்துகளின்  மூலமாகவோ அல்லது  உளஆற்றல்வசியம் மூலமாகவோ ஹோமியோபதியர்களால் நலப்படுத்த முடியும்.

இக் கட்டுரை ஆக்கத்திற்கு உதவிய நூல்கள்:

1.   Homeopathic Medical repertory III Edition- Dr.Robin Murphy
2.   Repertory of the Homeopathic Materia Medica- Dr. J.T.Kent.
3.   A concise Repertory of the Homeopathic Medicines- Dr.S.R.Phatak
4.   Decoding the Rubrics of Mind- Dr. Amulya Ratna Sahoo & Dr. Samaresh Chandra Mishra.
5.   Complete Dynamics –Online Repertory.
6.    Information on websites.



(இக்கட்டுரையில் ஏதாவது தவறு அல்லது பிழை இருந்தால் அதைத் தவறாமல் சுட்டிக்காட்டவும் . அத்துடன் புதிதாக இணைக்க வேண்டிய பிற குறிப்புகள் இருந்தாலும் அதையும் பதிவிடவும். ஹோமியோபதியின் வளர்ச்சிக்கு அது உதவி புரியும்.  அத்துடன்இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளை தானாக யாரும் எடுத்துக் கொள்ளக்கூடாது; தகுந்த ஹோமியோபதி மருத்துவரின் பரிந்துரையின் பேரிலே எடுத்துக் கொள்ளவேண்டும்)  



Saturday 11 November 2017

ஹோமியோபதியில் கட்புலனுக்கு அகப்படாதவற்றைக் காணும் திறன் அல்லது மனக்கண் தொலைக்காட்சி (CLAIRVOYANCE)

கட்புலனுக்கு அகப்படாதவற்றைக் காணும் திறன் அல்லது மனக்கண் தொலைக்காட்சி என்பது , தனது இயல்பான புலனுணர்வுக்கு அப்பாற்பட்டு .   மனக்கண் ( மூன்றாவது என்று எடுத்துக் கொள்ளலாம்) தொலையுணர்வு மூலமாக  ஒரு பொருளை, காட்சியை, நபரை அல்லது நடக்கப்போகும் நிகழ்வை தெரிவிப்பதாகும். இதை மிகைப்படியான (அல்லது கூடுதல்) புலன்கள் சார்ந்த அறிவு (கருத்து) என்றும் ,  ஆங்கிலத்தில் ESP ( EXTRA SENSORIAL PERCEPTION ) என்றும் கூறுவார்கள்.


இந்த ஆற்றல் ஒரு சிலருக்கு பிறவியிலிருந்து இயல்பாகவே அமைந்திருக்கும், மற்றும் சிலர் பலவிதமான மனப்பயிற்சி மூலமாகவும், தியானங்கள் மற்றும் யோகப்பயிற்சியின் மூலமாக   இதை வளர்த்துக் கொள்கிறர்கள். இத்தகைய  ஆற்றல் உள்ளவர்கள் ஒருவரின் வாழ்வில் என்ன நடந்து கொண்டிருக்கிறது , எதிர் காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை மனக்கண் தொலைக்காட்சி மூலமாகக் கூறுவார்கள். இவர்களை இந்திய கிராமப்பகுதிகளில் மருளாடிகள் என்று அழைக்கிறார்கள்.


இன்றும் கூட பல இந்தியக் கிராமங்களில் , நகரங்களில் இத்தகைய மனக்கண் தொலைக்காட்சி மூலம் அருள்வாக்கு கூறும் துறவிகள், குருக்கள், மருளாடிகள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். மக்களும் கூட்டம் கூட்டமாக அவர்களை நம்பி நாடிச் செல்கிறார்கள். அதில் சில ஏமாற்றுப் பேர்வழிகளும் இருக்கிறார்கள்; அவர்கள் பணம் பண்ணுவதே !. 

ஏறத்தாழ 19,20 ஆம் நூற்றாண்டு முதல் மனக்கண் தொலைக்காட்சி பற்றி பேசப்பட்டாலும்  இதற்கு அறிவியல் ரீதியாக விளக்கங்கள் இது வரை எட்டப்படவில்லை என்பதே உண்மை.  1970- 1990 ஆம் ஆண்டுகளில் , வில்லியம்  கிரிகோரி [William Gregory (chemist)] ,   குஸ்டாவ்  பஜன்ஸ்டெசேர் (Gustav Pagenstecher) மற்றும் ருடால்ப்  டிஸ்சனீர் (Rudolf Tischner)  போன்ற ஆராய்ச்சியாளர் நிறைய பரிசோதனைகளை மேற்கொண்டார்கள். அவர்கள்  ஒரு பொருளை மறைத்து வைத்துக் கொண்டு , அது எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள் என்று மனக்கண் தொலைக்காட்சி நிபுணர்களிடம் பரிசோதித்த போது , எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்று பதிவு செய்துள்ளார்கள்.

அதே போல் குறிசொல்வதை பற்றி ஆராயும் நிபுணர்கள் (PARAPSYCHOLOGISTS) , மனக்கண் தொலைக்காட்சி ( CLAIRVOYANCE), நுண்ணுணர்வு ( TELEPATHY), முன்னுணர்வு (PRECOGNITION) ஆகியவற்றை   இணைத்து ஒரே செயல்பிரிவின் கீழ் இயங்குமாறு ஒரு திட்டத்தை கொண்டு வந்தார்கள். ஆனால் , அதுவும் நடைமுறையில் இன்றளவும் சாத்தியப்படவில்லை.

ஆனாலும் ஏராளமான ஆன்மீகத் தத்துவ ஞானிகள் ஒவ்வொருவருக்கும்     மூன்றாவது கண் இருப்பதாகவும் , அதை யோக சக்தியின் மூலம் (குண்டலினி ) எழுப்பி நுண்ணுணர்வு ஆற்றலை வளர்த்துக் கொள்ளமுடியும் என்று நம்புகிறாரக்ள். மனித மூளையின் ஆழத்தில் அமைந்துள்ள  பைனியல் சுரப்பி (PINEAL GLAND)   இத்தகைய ஆற்றலைப்  பெருக்க உதவுவதாகவும்  குறிப்பிடுகிறார்கள் . பண்டையகால துறவிகளும் , யோகிகளும்  மற்றும்  சமயவாதிகளும் இந்த பைனியல் சுரப்பியே ஞானத்தைப் பெருக்க பெரிதும் உதவுகிறது என்று பதிவு செய்துள்ளார்கள். அதே     போல் நுண்ணியல் கோட்பாட்டு ஆய்வாளர்களும் இந்த பைனியல் சுரப்பியின்  செயல்பாடு இன்றளவும்  விசித்திரமாக இருப்பதாகவும் , முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கிறார்கள். அதனால் , இந்த கட்புலனுக்கு அகப்படாதவற்றைக் காணும் திறன் அல்லது மனக்கண் தொலைக்காட்சி ( CLAIRVOYANCE) என்பது விசித்திரமாகவும் , புரிந்துகொள்ளப்படாதாகவும் இருக்கிறது.

ஹோமியோபதி மருத்துவத்தில் இந்த மனக்கண் தொலைக்காட்சி ( CLAIRVOYNCE),  மாயை அல்லது மாயத்தோற்றம் (DELUSION ,ILLUSION) ,  மற்றும் பிரம்மை ( HALLUCINATION) போன்றவைகள் குறிப்பிடத்தக்க வகையில் அங்கம் வகிக்கிறது. அதிலும் பல துயரர்களின் குறிகள் மிகவும் ஆச்சரியம் தருவதாக  இருக்கும். உதாரணமாககீழ்காணும் உணர்வுகளையும் , கனவுகளையும் வெகு இயல்பாகக் கூறுவார்கள். 

1.       என் உறவினர் விரைவில் இறந்து போவார் என்று நினைத்தேன் ; அதே போல் இரண்டு நாளில் இறந்து விட்டார்.
2.       ஏதோ கெடுதல் நடக்கப்போகிறது என்று நினைத்தேன் ; அதே போல் நடந்து விட்டது.
3.       நான் வணங்கும் கடவுள் என் கனவில் வந்து , இது நடக்கப்போகிறது என்று கூறினார். அதே  போல் நடந்தது.
4.       நான் கடவுளின் நேரடி பாதுகாப்பில் இருக்கிறேன் ; என்னை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது.
5.       கடவுள் என்னுடன் நேரிடையாகப் பேசுவார்.
6.       என்னால் அடுத்தவர் மனதில் நினைப்பதைக்கூற முடியும்.
7.       என்னை யார் தொலைபேசியில் அழைக்கிறார்கள் என்று எனக்கு தெரிந்து விடும்.
8.       உங்கள் வீட்டில் யாரோ சூனியம் வைத்துவிட்டார்கள் ; அதனால் தான் நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள்
9.       நான் நினைத்தவாறே நடந்து விட்டது.
10.     இறந்து போன என் கணவர்  கனவில் வந்து இது நடக்கப் போகிறது என்று எச்சரித்தார். அவ்வாறே நடந்து விட்டது. 
ஏறத்தாழ 89 ஹோமியோபதி மருந்துகளில் இந்த மனக்கண் தொலைக்காட்சி நிலை பற்றிய குறிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அம்மருந்துகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன;

Mind; clairvoyance: acher-a ACON(4) agar amet(2) ANAC(3) androc anh ant-c ARG-N(3) arn bani-c benz betul bos-s(2) bry bufo caj calc calop-s camph CANN-I(3) carc cath-a chir-f COFF(3) con corv-c(2) CROT-C(3) cygn-c cypra-e dat-a emer(2) enal-c falco-p gall geoc-c GRAN(3) guin haem-i-b haliae-lc(2) heli helod-c herin hura hydro-c HYOS(3) iod kola lac-del LACH(4) lamp-c lap-laz lat-h latex lsd(2) LYSS(3) m-arct m-art MAND(3) med(2) nabal naja neod neon NUX-M(3) olea onc-t OP(3) PHOS(3) pras-c PYRUS(3) ros-d ros-g salx-f SIL(3) sol-n spect stann STRAM(3) succ taosc TARENT(3) tax thea thul-m turq-l uro-h VALER(3) VERAT-V(3)

மேற்கூறிய மருந்துகளில் குறிப்பிடத்தக்க வகையில் செயலாற்றும் முக்கியமான சில மருந்துகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

தொடரும்...





Friday 10 November 2017

ஹோமியோபதி மருத்துவத்தில் பணம் ,பேராசை மற்றும் கருமித்தனம்

ஹோமியோபதி மருத்துவத்தில்   பணம் ,பேராசை  மற்றும்  கருமித்தனம் .



தற்போது நாம் வாழும்  பூமியில்,  மனிதத்துவம் மறைந்து போய் ,  சுயநல வாழ்விற்காக பணம்  தேடும்  மக்களையே அதிகம் கொண்டுள்ளது. தனது தேவைக்கு மேல் மிஞ்சியதை தானம் செய்து மகிழும்   மனிதர்கள் அரிதாகிவிட்டார்கள்பணமே தங்களது அந்தஸ்த்தையும் , எதிர்காலத்தையும்   நிர்ணயம் செய்வதாக கற்பிதம் செய்து அதை தேடி அலைகிறார்கள். தான் பெரிய பணக்காரனாக வாழ வேண்டும் என்ற பேராசையால் (AVARICE) தூண்டப்பட்டு மனிதன் கண்டுபிடித்த காகிதப் பணத்திற்குஅவனே அடிமையாகி வாழ்கிறான் .


தற்போதைய முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சி , மக்களை பொது நலத்திலிருந்து மாற்றி  சுயநலமிகளாக்கிவிட்டது என்றே கருதுகிறேன். தனக்கு தேவையான பொருள்களை  வாங்குவதற்கு கூட  மனமில்லாமல், கருமித்தனமாக  (MISER) பணத்தை சேமிக்கிறார்கள்.  அதாவது , நாளைய வளமான வாழ்விற்காக அல்லது மருத்துவச் செலவிற்காக  இன்று  தனது உடல் நலத்தைப் கெடுத்துக் கொண்டு   பணம் சேர்க்கிறார்கள்.


ஹோமியோபதி மருந்துகளின் நிரூபணத்தின் போது இத்தகைய பேராசை, கருமித்தனம் , பணமில்லையென்றால் ஏழையாகிவிடுவோம் என்ற பயம் போன்ற குணங்களை வெளிக்கொணர்ந்த பல மருந்துகள் உள்ளன. அம்மருந்துகளைப் பயன்படுத்தி நலப்படுத்திய பல துயரர்களின் வரலாறும் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அம்மருந்துகளை ஆராயும் போது ,  சுவாரசியமான பல தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. அவற்றை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.


பேராசை( AVARICE):  ஒருவனுக்கு  அதிகப்படியான பொருளும் , உடைமைகளும் வேண்டும் என்ற அளவுகடந்த விருப்பத்தின் காரணமாக அவற்றை சேமிக்க ஆரம்பிக்கிறான் என்றால் அவனை பேராசைக்காரன் என்று கருதலாம்.. அவன் பணத்தைப் பெருக்க  வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு , களைப்பைக் கூட பெரிது  படுத்தாமல் உழைத்து தனது சொத்தைப் பெருக்கிக்  கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறான் . அவனது மனம் முழுவதிலும் பணத்தை அதிகமாக சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு , தமக்குத் தேவையான,  அவசரமான  செலவைக்கூட தவிர்த்து விடுகிறான் . அதனால் அவன் , தமது தேவைக்கு மேல் அதிகம் விருப்பம் உள்ளவனாக வாழ்கிறான். (ஆர்சனிக்கம் ஆல்பம்) .


பேராசை பிடித்த அத்தகைய மனிதர்கள் , தங்கள் கருமித்தனமாக வாழுகிறோம் என்பதைக்கூட ஒப்புக் கொள்ள மறுப்பார்கள்; அதனால் சமூகம் அவர்களைப் புறக்கணிக்கும். அவர்கள் , ஒரு பொருளை வாங்க வேண்டுமென்றால் பல கடைகளில் ஏறி இறங்கி , விலையை விசாரித்து , பின்பு குறைந்த விலையுள்ள கடையில் தான் அப்பொருளை வாங்குவார்கள். ஒரு பொருள் தரமானதாக இருந்தாலும் , விலை அதிகமாக இருந்தால் அதை வாங்க மாட்டார். என்னதான் அதிகப்படியான பொருள்வசதி  அவர்களுக்கு இருந்தாலும் , செலவில்லாமல் கருமியாக வாழ்வதையே ( பொருளை சேமிக்க) அவர்கள் விருப்புவார்கள் .  விதிவிலக்காக ஒருசிலரே, அதிகப்படியான பணம் சேர்ப்பதோடு , அதிகம் செலவு செய்வதிலும் விருப்பம் உள்ளவராக இருப்பார்கள்ஹோமியோ மருத்துவத்தில் ,  "விராட்ரம் ஆல்பம் " என்ற மருந்து தேவைப்படும் துயரர்கள் இத்தகைய குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பணமும்  தேவை ; அத்தோடு சமூகத்தில் தங்களது நிலையை உயர்த்திக் கொள்ளவும் வேண்டும் அதனால் பணத்தை வாரி இரைப்பார்கள்


கருமித்தனம் அல்லது கஞ்சத்தனம் ( MISER) : இவர்களுக்கு பணத்தின் மீது அதிகம் விருப்பம் இருப்பதோடு  கட்டாயமாக செலவு செய்ய வேண்டிய தருணத்தில் கூட செலவிடமாட்டார்கள். உதாரணமாக , அவரது "அம்மா" அல்லது "அப்பா " இறந்தபோது , அவர்களை அடக்கம் செய்யக்கூட செலவு செய்ய விரும்பமாட்டார்கள். அதை,அவரது சகோதரர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று பேசாமல் இருந்து விடுவார்கள். அதே போல்  உடல்நலம் குன்றிய போது  , மருத்துவமனைக்குச்  சென்றால் செலவாகும் என்று எண்ணித் தவிர்த்து விடுவார். அதனால், இவர்கள் பெரும்பாலும் சுயநலவாதியாகவும் , தன்மோகியாகவும் ( NARCISSIST) மற்றும் சமூகத்திற்கு எதிரானவராகவுமே ( ANTISOCIAL PERSONALITIES) இருப்பார்கள்.


ஹோமியோபதி மருந்துகாண் ஏட்டில், இவ்விரண்டு தன்மைகளும் பல்வேறு பிரிவுகளின் கீழ் எழுதப்பட்டுள்ளது. மருத்துவர் S.R. பதக் , தமது மருந்துகாண் ஏட்டில் பேராசை( AVARICIOUS) என்ற தலைப்பின் ( பக்கம்-23 ) கீழ் தனியாப் பேராசை ( GREEDY) மற்றும் கருமித்தனத்தையும் ( MISERLY) இணைத்து 5 மருந்துகளைக் கொடுத்துள்ளார். அவையாவன;   ஆர்சனிக்கம் ஆல்பம்(ARS), லைகோபோடியம் (LYC), பல்சாட்டில்லா(PULS), செபியா(SEP) மற்றும் சல்பர் (SULPH).

மரு. ராபின் மர்பி , தமது மருந்துகாண் ஏட்டில் , தணியாப்பேராசை ( GREEDY) என்ற தலைப்பின் கீழ் ( பக்கம்- 1616 ) இல் 75  மருந்துகளை கொடுத்துள்ளார்.  அதில் முதல் தரத்தில் ஆர்சனிக்கம் ஆல்பம்(ARS), லைகோபோடியம் (LYC), பல்சாட்டில்லா(PULS),  சினா (CINA) மற்றும் சிலிகா(SIL) என்ற 5 மருந்துகளும் , இரண்டாவது  தரத்தில் சைனா(CHIN)ஹயாசியாமஸ்(HYOS)காலி-பைக்(KALI-BI) , நக்ஸ்வாமிக்கா(NUX-V) , பாஸ்பாரிக் –ஆசிட்(PH-AC), செபியா (SEP) போன்ற 6 மருந்துகளையும் கொடுத்துள்ளார்.


எசன்ஷியல் சிந்தஸிஸ் (ESSENTIAL SYNTHESIS)  மருந்துகாண் ஏட்டில் , பேராசை ( AVARICE) என்ற தலைப்பில்  ( பக்கம்- 23 ) ஆர்சனிக்கம் ஆல்பம்(ARS) , பாரிடா –கார்ப்(BAR-C), பிரையோனியா(BRY) , கல்கேரியா-கார்ப் (CALC)கல்கேரியா-புளுவாரிக்கம் (CALC-F), சினா(CINA) , காலோசிந்தேசிஸ் (COLOC), டல்காமரா (DULC), லைகோபோடியம் (LYC) , மெடோரினம்(MED), மெலிலோட்டஸ் (MELI), மெர்குரியஸ்(MERC), நேட்ரம்-கார்ப் (NAT-C), பிளாட்டினா (PLAT), சோரினம் (PSOR), பல்சாட்டில்லா(PULS),  ரீயம்(RHEUM),  செபியா(SEP) , சிலிகா(SIL) மற்றும் சல்பர் (SULPH) என்ற   21 மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன.


மரு.கெண்ட் (J.T.KENT) தமது மருந்துகாண் ஏட்டில் , பேராசை ( AVARICE) என்ற தலைப்பில்  ( பக்கம்- 9 ) இல் 12  மருந்துகளை கொடுத்துள்ளார் . அவையாவன;   ஆர்சனிக்கம் ஆல்பம்(ARS), பிரையோனியா(BRY) , கல்கேரியா-கார்ப் (CALC),  கல்கேரியா-புளுவாரிக்கம் (CALC-F ),  சினா(CINA) , காலோசிந்தேசிஸ் (COLOC), லைகோபோடியம் (LYC), மெலிலோட்டஸ் (MELI), நேட்ரம்-கார்ப் (NAT-C), பல்சாட்டில்லா(PULS), ரீயம்(RHEUM),  மற்றும் செபியா(SEP) .
ஆனால் , மரு. கலவர்த்தின் ( J.P.GALLAVARDIN) அவர்கள் மட்டுமே தமது மனோதத்துவ மருந்துகள் மற்றும்  மருந்துகாண் ஏடு என்ற புத்தகத்தில் , ( பக்கம்- 90 மற்றும் 140 ) பேராசையின் ( AVARICE) கீழ், சிலிகா(SIL),  லாக்கசிஸ் (LACH) , கல்கேரியா-கார்ப் (CALC),  ஹயாசியாமஸ் (HYOS),  மற்றும் சல்பர் (SULPH) என்ற  5 மருந்துகளையும் , அவற்றுடன் நேட்ரம்-மூர் (NAT-M) மருந்தைச் சேர்த்து 6 மருந்துகளை கருமித்தனத்திலும் ( MISER) கொடுத்துள்ளார் .

அதனால் இவ்வார்த்தைகளை வேறுபடுத்திக் காட்டும் குறிமொழிகளையும், அதில் உள்ளடங்கியிருக்கும் மருந்துகளையும் இப்போது பார்க்கலாம்;

1.   AVARICE:


Mind; avarice; alternating with squandering: calc lach merc sulph
Mind; avarice; anxiety about future, from: gink NUX-V(3) PH-AC(3) stann

Mind; avarice; generosity toward strangers, avarice as regards his family: carb-v hyos nat-m nux-v

Mind; avarice; squandering on oneself, but: calc hyos marm-a nux-v sep
Mind; avarice; wants all for himself: nux-v puls
Mind; irresolution, indecision; marry, to; avarice, from: lyc
Mind; ungrateful; avarice, from: bry puls sil sulph

Mind; extravagance; sometimes, sometimes miserly: ars lach merc

Mind; extravagance; themselves, for, and miserly as regards others: calc caust nux-v sep
( Source: Complete Dynmics)

2.   MISERS:

Mind; misers (person), but spends for himself : calc, nux-v, sep, hyos

Mind; misers, because of anxiety for the future, which causes hate and malice and (made him): ph-ac

Mind; misers, towards family, generous towards others: nat-m, carb-v, nux-v, hyos

Mind; misers,sometimes, sometimes spenders: lach, merc

( Source: Psychiatry Remedies : MM & Repertory)

ஆகவே, நம்மிடம் சிகிச்சைக்காக வரும் துயரர்களுக்கு மேலே குறிப்பிட்ட (மனக்குறிகள்) குறிமொழிகளின் அடிப்படையிலும் , அந்தந்த துயரர்களுக்குரிய தனித்துவமான குறிகளின் அடிப்படையிலும் சரியான மருந்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் , பேராசை மற்றும் கருமித்தனத்தில் ஒவ்வொரு துயரர்களும்  எவ்வாறு வேறுபடுகிறார்கள் , அவர்களுக்குரிய சரியான மருந்து எது என்பதை தெரிந்து கொள்வதும் மிகவும் முக்கியம். அதனால் மேலே குறிப்பிட்ட மருந்துகளில் சிலவற்றை விபரமாகப் பார்க்கலாம்.

ஆர்சனிக்கம் ஆல்பம்:

இம்மருந்திற்குரிய துயரர்கள் , உலகம் தங்களை மிகவும் பயமுறுத்துவதாகவும் , குழப்பமிக்கதாக  இருப்பதாகவும் எண்ணுவார்கள்.  அவர்களுக்கு வயதாகி பலவீனமாகிப் போனதால், பிறரை சார்ந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அதே சமயத்தில் இவர்கள் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பதால் , தன்னை  சுற்றியுள்ளவர்களுக்கு எதுவும் செய்யமாட்டார்கள்; அதனால் அவர்கள் விலகிப் போய் விடுவார்கள் என்ற பயமும் இருக்கும்.  இந்த சூழலில் அவர்களுக்கு  பாதுகாப்பற்ற உணர்வு ( INSECURITY) ஏற்பட்டு மனஅமைதியின்மையும் , பயமும் உருவாகும்.

இவர்களிடம் யாராவது பணஉதவியோ அல்லது நன்கொடையோ கேட்டால் கடும்கோபம் வந்துவிடும். அதுமட்டுமல்லாமல் , தங்களை சுற்றி திருடர்கள் இருப்பதாகவும், அவர்கள் , இவர்களது பலவீனத்தை பயன்படுத்தி ஏமாற்றி விடுவார்கள் என்ற சந்தேகமும் பயமும் இருக்கும்.  தங்களது எதிர் கால வாழ்விற்காக எப்போதும் பணத்தையும், உடமைகளையும்  சேமிப்பதிலேயே கண்ணும்கருத்துமாக இருப்பார்கள். எதையும் தேவைக்கு அதிகமாவே விரும்புவார்கள். இவர்கள் செலவு செய்வது என்பது மிகவும் அரிதாகவே இருக்கும். பொதுவாக  இவர்கள் பணம், உறவுகள் மற்றும் உடைநலம் போன்றவற்றில்  யாரையும் நம்பாதவர்களாகவும், சந்தேமுள்ளவராகவும் , எச்சரிக்கை மற்றும் பதட்டத்துடனும் காணப்படுவார்கள்.    

பல்சாட்டில்லா:

இவர்களது அமைதியான , சாந்தமான உருவத்திற்குள்ளே அவர்களது சுயநலமும் ஒளிந்திருக்கும். அவர்களது அதீத சுயநலத்தின் காரணமாக அதுவும் தனக்குத்தான் வேண்டும் என்ற விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள். பணத்தின் மீது பேராசை இருக்கும். அதனால் , மற்றவர்களுக்கு பணம் கடன்கொடுத்து அதன் மூலம் அதிகம் வட்டி வாங்குபவர்களாகவும் இருப்பார்கள்.

சிலிகா:

இவர்களுக்கு அதிகப்படியான பதட்டமும், எதிர்காலத்தில் ஏதாவது தவறு நடந்து விடும் என்ற எதிர்பார்ப்பும் இருப்பதால் பணம் சம்பந்தமான விஷயத்தைக் கையாளுவதில் இயலாதவராக அல்லது பலவீனமுள்ளவராக இருப்பார்கள். இந்த மனப்பான்மை அவர்களுக்கு , தங்கள் ஏழையாகிவிடுவோம் என்ற பயத்தை மனதில் ஆழமாக பதிய செய்துவிடும். அதனால் உள்ளூர பலவீனமிக்கவர்களாக இருப்பார்கள். அதை மூடி மறைத்து வாழ அதிகப்படியான பணத்தையும், சொத்தையும் சேர்ப்பார்கள். அதனால் செலவிடுவதை தவிர்த்து சிக்கனத்துடன் வாழ்வார்கள்.

கல்கேரியா கார்பானிக்கம்:

இவர்களுக்கு  பணம் இல்லையென்றால்  பாதுகாப்பற்ற சூழ்நிலை வந்துவிடும் என்ற பயம் இருக்கும். அதனால் பணத்தின் மீதும் , உணவின் மீதும் தணியாத பேராசை ( GREEDY) இருக்கும்.


சைனா: 

தங்கள் மிகவும் அதிர்ஷ்டமில்லாதவர்கள் என்றும் , பலவீனமாகிப் போனதாகவும் நினைத்துக் கொள்வார்கள். அதனால் எதிரிகளின் தொடர்ந்த தாக்குதலுக்கு உள்ளாவோம் என்ற பய உணர்வு இருக்கும். இத்தகைய உணர்விலிருந்து வெளிவர பேராசைப் படுவார்கள்.


லைகோபோடியம்:

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு 200 முதல் 300 மீட்டர் உயரம் வரை வளரும் மரமாக இருந்த லைகோபோடியம் , காலப்போக்கில் இயற்கை மாற்றங்களினால் அதன் வளர்ச்சி குன்றி , தனது உயர்ந்த நிலையை இழந்து இப்போது சிறிய செடியாக மாறிவிட்டது. அதனால் , இத்தாவரத்திற்கு தான் சிறியதாக இருப்பதாகவும் , மிகுந்த உயரத்திற்குச்  செல்ல வேண்டும்  என்ற தணியாத பேராசை இருக்கும். இக்குறியே துயரர்களிடமும் காணப்படும். இவர்களுக்கு அதிகாரமுள்ள உயர்ந்த பதவிகளின் மீது பேராசையும் , மிகுந்த விருப்பமும் இருக்கும். அதே சமயத்தில் கஞ்சத்தனத்திற்கும் இது மிகச் சிறந்த மருந்து என்கிறார் மரு. K.C. பாஞ்சா.

மெர்குரியஸ்:


இவர்கள் புரட்சிகரமாக கருத்திற்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள். அத்தோடு இவர்களுக்கு எல்லாவற்றையும் தங்களது சக்திக்குள் கட்டுப்படுத்தி வைத்து கொள்ளவேண்டும் என்ற தணியாத பேராசை இருக்கும். அதனால் , தங்களுக்கு எதிரான ஆற்றலை முறியடிக்கக்கூடிய  வலிமை வேண்டும் என்ற பேராசை இருக்கும்.  அது பணமாகவோ அல்லது அதிகாரமாகவோஅல்லது சக்தியாகவோ இருக்கலாம்.

செபியா:


செபியா துயரர்கள் தங்களது குழந்தைகள் மற்றும் கணவருக்காகவே வாழபவர்கள். இவர்களுக்கு மனதில்  உடன்பாடு இல்லையாயினும் , அவர்களது ( கணவர்/குழந்தைகள்) ,சந்தோஷத்திற்காக தங்களது மாற்றிக் கொண்டு வாழவேண்டிய சூழ்நிலை இருக்கும். அதனால் செபியா துயரர்களுக்கு  சுதந்திரமாகவும் , தனியாகவும் செயல்பட வேண்டும் என்ற தணியாத பேராசை இருக்கும்.

விராட்ரம் ஆல்பம்:

அதிகம் பொய் பேசுபவர்கள். பணத்தின் மீது அதிக பேராசை இருக்கும். அதே சமயத்தில் பணத்தை தாராளமாகவும்  செலவு  செய்வார்கள். சமூகத்தில் , தங்களது அந்தஸ்த்தை அல்லது மரியாதையை உயர்த்திக் கொள்ள பணத்தை தண்ணீராக செலவு செய்வார்கள். அதனால் , மேன்மேலும் பணம் சம்பாதிக்கவும் , செலவு செய்யவும் தணியாத பேராசை இருக்கும். தற்போதுள்ள பெருவாரியான அரசியல்வாதிகளுக்கு இம்மருந்து தேவைப்படும்.  

பாஸ்பாரிக்கம் ஆசிட்:

இடைவிடாத போராட்டமும், தளர்ந்து/ சோர்ந்து விடுதலும் எல்லா அமில மருந்துகளுக்கும் பொதுவானது. தங்கள் சந்திக்கும் எல்லாப்போராட்டங்களிலும் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயம் இம்மருந்தில் உள்ளது. அதனால் முன்னெச்சரிக்கையுடன் அவற்றை தவிர்க்க வேண்டும் என்ற பேராசை இவர்களுக்கு இருக்கும்.  

இதே போன்று  பிற மருந்துகளின் சாராம்சத்தையும் நன்றாக  புரிந்து கொண்டு ஆயிரக்கணக்கான துயரர்களை நலப்படுத்தி , நல்ல ஹோமியோபதி மருத்துவர் என்று பெயர் எடுக்க  வேண்டும் என்று நீங்களும் பேராசைப்படுங்கள்; பணம் சம்பாதிக்க அல்ல.

இக் கட்டுரை ஆக்கத்திற்கு உதவிய நூல்கள்:

1.   Homeopathic Medical repertory III Edition- Dr.Robin Murphy
2.   Repertory of the Homeopathic Materia Medica- Dr. J.T.Kent.
3.   The Essential Synthesis- Dr. Frederik Schroyens
4.   A concise Repertory of the Homeopathic Medicines- Dr.S.R.Phatak
5.   Psychiatry Remedies- Dr. J.P.GALLAVARDIN
6.   Decoding the Rubrics of Mind- Dr. Amulya Ratna Sahoo & Dr. Samaresh Chandra Mishra.
7.   ACSOTROM- Dr. Shreepad  Arun Khedekar, Dr. Chirag R. Upadhyay.
8.   Repertory of Striking Rubrics of mind in Homeopathy- Dr.H.L.Chitkara
9.   The Spirit of Homeopathic Remedies- Dr. Dider Grandgeorge
10.  Complete Dynamics –Online Repertory.



(இக்கட்டுரையில் ஏதாவது தவறு அல்லது பிழை இருந்தால் அதைத் தவறாமல் சுட்டிக்காட்டவும் . அத்துடன் புதிதாக இணைக்க வேண்டிய பிற குறிப்புகள் இருந்தால் அதையும் பதிவிடவும். ஹோமியோபதியின் வளர்ச்சிக்கு அது உதவி புரியும். மேலும் , இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளை தானாக யாரும் எடுத்துக் கொள்ளக்கூடாது. தகுந்த ஹோமியோபதி மருத்துவரின் பரிந்துரையின் பேரிலே எடுத்துக் கொள்ளவேண்டும்)