Saturday 20 September 2014

சல்பர்

சல்பர்
(SULPHUR-கந்தகம்)



பிரிவு : தனிமங்கள்
நிரூபணம் செய்தவர் : மரு.ஹானிமன்
I.முன்னுரை(Introduction) :

மாமேதை ஹானிமனால் கந்தகத்திலிருந்து நிருபணம் செய்யப்பட்ட இம்மருந்தானது மனித உடலில்  தங்கி  சொறி,சிரங்கு மற்றும் அரிப்பை ஏற்படுத்தும் சோரா விஷத்தை நீக்கி (anti-psoric)  நலத்தைக் கொடுக்கும் ஆற்றல் கொண்டதால் சோரா மருந்துகளின் அரசன் என்று அழைக்கப்படுகிறது. மனிதன் நோயுற்று அவதிப்படுவதற்கும்  , திரும்பத்  திரும்ப நோய்ததாக்குதலுக்கு உள்ளாவதற்கும் என்ன காரணம் என்பதை  பல ஆண்டுகள் ஆய்வு செய்து அதற்கு, சோரா (Psora) , சைக்கோசிஸ் (Sycosis) மற்றும்   சிபிலிஸ் ( Syphilis) என்ற மூன்று மியாசங்கள் தான் காரணம் என்பதைக் கண்டறிந்தார் மரு. ஹானிமன்.  அதாவது உடலின் ஆரோக்கியத்தை அழித்து இறப்பை ஏற்படுத்தும் தன்மையுள்ள  மேகப்புண்கள், புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்த்தாக்குதலுக்கு உள்ளான நிலையை சிபிலிஸ் எனவும், கட்டிகள், மருக்கள், பாலுண்ணிகள்  மற்றும் துர்சதை வளர்ச்சி போன்ற நிலையை சைகோசிஸ் எனவும்தோலில் அரிப்பை ஏற்படுத்தும் சொறி , சிரங்கு போன்ற நோய்களை தோற்றுவிக்கும் தன்மையை சோரா என்றும் வகைப்படுத்தியுள்ளார்.  இந்த சோரா விஷத்தை நீக்கும் ஆற்றல் கொண்ட பல மருந்துகள் ( PSOR, CAUST, GRAPH) இருந்தாலும் சல்பரே அவற்றிற்கு அரசனாக விளங்குகிறது.

உருவ அமைப்பைப் பொறுத்தவரை சல்பர் துயரர் மெலிந்த உடலும் , வளைந்த தோள்பட்டையுடனும், நடக்கும்போதும் உட்காரும் போதும் கூன் விழுந்த நிலையிலே காணப்படுவார். மிக நுண்ணிய முகமும் , பாஸ்பரஸ் துயரரைப் போல் சிவந்தும், ஒல்லியாகவும், மெல்லிய மற்றும் நீண்ட கண்ணிமையின் மயிர்வரிசை கொண்டவராகவும் இருப்பார். அவரது அழுக்கடைந்த தோற்றத்திலிருந்தும் , உடலிலிருந்து வெளிவரும் அருவருப்பான முடை நாற்றமும் ( Stinking Odor) அவரை நமக்கு அடையாளம் காட்டிவிடும். குறிப்பாக அக்குளிலிருந்தும், பாதத்திலிருந்தும் வெளிப்படும் வியர்வை கடுமையான நெடியுடன் இருக்கும். இத்தகைய அருவருப்பான நிலையில் இவர்கள் இருந்தாலும் மற்றவர்களிடம்  வெளிப்படும் கெட்ட நாற்றத்தினை இவர்களால் தாங்க முடியாது என்பது ஆச்சரியமான ஒன்று.  ஒரே வார்த்தையில் கூறுவதாக இருந்தால் அசுத்தமான, சோம்பலான மற்றும் கர்வம் பிடித்த வேதாந்தியாக , உடல்  முழுவதும் காந்தள் தன்மை கொண்டவராக இருப்பார்கள். 

இவர்கள் , மதசம்பந்தமான அல்லது வேதாந்தம் அல்லது தத்துவம் சம்பந்தமான விஷயங்களைப் பற்றிய ஆராய்ச்சியில்  சதா சர்வகாலமும் ஈடுபடுவதால் இவர்களை வறட்டு வேதாந்திகள்  ( Ragged Philosopher) என்று மரு.ஹெரிங் குறிப்பிடுகிறார். இவர்களின் உடலில் ஏற்படும் காந்தள் அல்லது எரிச்சல் தன்மையையும் ( Burning ) , அரிப்பையும் (Itching)  கொண்டு சல்பரைத் தேர்வு செய்வது எளிமையாக இருக்கும். இவர்கள் உடலில் தண்ணீர் படுவதை விரும்பமாட்டார்கள் ; அதனால் குளிப்பது பிடிக்காது. காலை பதினோரு மணிக்கெல்லாம் வயிறு காலியான உணர்வு இருக்கும். சாப்பிட்டவுடன் நாற்காலியில் சாய்ந்தவாறு சிறு தூக்கம் போடும் தன்மையுடையவர்களாக இருப்பார்கள் ( Cat-nap sleep). நீண்டகால நோய்களுக்கு மருத்துவத்தைத் துவக்குவதற்கும் , உடனடி அல்லது குறுகியகால நோயில் துயரர் நலமடைந்தவுடன் மருத்துவத்தை முடிப்பதற்கு நிறைவு மருந்தாகவும் சல்பரைப் பயன்படுத்தலாம். நீண்டகால கீல்வாத நோயிற்கு முதலில் கொடுக்கவேண்டிய மருந்து சல்பர் தான். ஒரே மருந்தினை வைத்துக் கொண்டு ஹோமியோபதி மருத்துவம் செய்வதாக இருந்தால் நீங்கள் எந்த மருந்தை தேர்வு செய்வீர்கள் என்று என்னைக் கேட்டால் நான் சல்பரையே தேர்ந்தெடுப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பிரபல இந்திய மருத்துவர்  என். எம். சௌத்திரி.

II.இம்மருந்துக்கான சிறப்புக் குணங்கள் (Nucleus):

·          அழுக்கடைந்த தோற்றத்துடன், கிழிந்த  கந்தலான ஆடைகளையும், தொப்பியையும் உபயோகிப்பார்கள். 
·          மெலிந்த உடலுடனும், வளைந்த தோள்பட்டைகளுடனும் காணப்படுவார்கள். நடக்கும்போது கூனிக்கொண்டே நடப்பார்கள். இவர்களால் அதிக நேரம் நிற்க இயலாது உடனே உட்கார வேண்டும்.
·          காலை பதினோரு மணிக்கெல்லாம் வயிறு காலியாகி அதிகமாகப் பசிக்கும் ( < Eating NAT.C) .கட்டாயம் சாப்பிடவேண்டிய நிலை ஏற்படும்.
·          இவர்களுக்கு குளிப்பதற்குப் பிடிக்காது. குளித்தபிறகு தொல்லைகள் அதிகரிக்கும். அதேபோல் அடிக்கடி குளித்தாலும் கூட உடலின்   கெட்ட நாற்றம் மறையாது.

·          மதம்  சம்பந்தமான அல்லது தத்துவம் சம்பந்தமான விசயங்களில் நேரத்தை செலவிடுவார்கள். 
·          இவர்கள் மிகவும் சுயநல மனம் படைத்தவர்கள் அதேபோல் கர்வம் கொண்டவர்கள்( மிகவும் தெரிந்தவன் என்ற கர்வம் ).

·          உடலின் பல பாகங்களில் காந்தள் அல்லது எரிச்சல் தன்மை இருக்கும். குறிப்பாக பாதத்தில் எரிச்சல் இருக்கும். பாதங்களில் சில்லென்று இருக்கும் போது தலையில் இடைவிடாத சூடு இருக்கும்.

·          உடலின் துவாரங்கள் அனைத்தும்  அதாவது , மூக்குத்துவாரங்கள், காதுகள், ஆசனவாய், மூத்திரத்துவாரங்கள் , யோனி போன்ற பகுதிகள் அனைத்தும்  மிகவும் சிவந்திருக்கும். அதேபோல் உதடுகள் அதிகமாக சிவந்து காணப்படும்.

·          தோல்களில் கடுமையான அரிப்பு. சொரிந்த பிறகு அப்பகுதிகளில் எரிச்சல் அல்லது காந்தள்தன்மை அதிகரிக்கும்.

·          வெட்ப உடல்வாகு சூடு அல்லது வெப்பம் இவர்களுக்கு பிடிக்காது; குறிப்பாக படுக்கைச் சூடுஒத்துகொள்ளாது. அதனால் கால்களை போர்வைக்கு வெளியே நீட்டி குளிர்ச்சி செய்து கொள்வார்கள்.

·          வியர்வை மிகவும் கெட்ட நாற்றத்துடன் ( அக்குள் பகுதியில்) இருக்கும்.
·          தோல் கடினமாகவும் , கரடுமுரடகாவும் , அருவருக்கத்தகுந்த வகையிலும் காணப்படும்.  தோல் பகுதி காய்ந்து , செதில்களாய் மாறி வியாதி பிடித்திருக்கும். குளித்தாலும் தோளிலிருந்து வெளிப்படும் நாற்றம் போகாது. 

III.பண்பியல்பு குறிகள் (Characteristic Symptoms) :

·          உச்சந்தலையில் நிரந்தரமான சூடு இருந்துகொண்டே இருக்கும் (Graph, Lach, Phos) .
·          தொடக்க நிலையிலுள்ள காச நோயிற்கு ( Incipient Phthisis) இது மிகச் சிறந்த மருந்து. 
·          சல்பர் மருந்து தேவைப்படும் பெண்கள் மிகவும் சந்தோசமான மனநிலை படைத்தவர்களாகவும் , அழகான பொருட்களை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். இரவில் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டால் பாடி மகிழுவார்கள். சந்தோசமான கனவுகள் தோன்றும்.
·          குழந்தைகள் அதிகமாக சாப்பிடும் குணம் படைத்தவர்களாக இருப்பார்கள் (Great Voracity) . கண்ணில் தென்படும் பொருட்களையெல்லாம் வாயில் போட்டுக்கொள்வார்கள்.
·          வயிற்றுப்போக்கு: வலி இல்லாமல் மலம் வெளியாகும்.விடியற்காலையில் படுக்கையை விட்டு எழுந்து ஓடச் செய்யும்.
·          இரவில் மூச்சுத்திணறல் ஏற்படும் என்று எண்ணி கதவு,ஜன்னல்களை திறந்து வைத்துக் கொள்வார்கள். கால் பகுதியிலும் , பாதங்களிலும் எரிச்சல் இருக்கும். அதனால் கால்களை மூடாமல் வைத்திருப்பார்கள் (Med) .
·          இரவில் சரியான தூக்கம்  இருக்காது அல்லது செத்த பிணம் போல் கனமான , களைப்பை ஏற்படுத்தும் தூக்கம் இருக்கும். தூக்கத்தில் பாதிக்கண்கள் திறந்திருக்கும்; சில சமயம் சத்தமாகப் பேசுவார்கள். ( நன்றாக தூக்கம் உள்ளவர்களுக்கு இரவில் சல்பரைக் கொடுக்ககூடாது)
·          தலையில் ஏற்பட்ட தோல் நோய்களை உள்ளமுக்கியதால் காது கேட்காமல் போய்விடும். காதுக்குள் விரலை விட்டு குடைய விரும்புவார்கள்.
·          கண் பார்வை குறைவாக இருக்கும்; வாயு விளக்கு அல்லது விளக்கொளியைப் பார்க்கும்பொழுது ஒளிவட்டம் சூழ்ந்திருப்பதாகத் தோன்றும்.
·          இனிப்புப் பொருள்களின் மேல் அதிக விருப்பம். உடல் நலம் குன்றிய நிலையிலும் பல வகையான இனிப்பு பதார்த்தங்களை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
·          நீண்டகால மதுப்பழக்கத்தினால் ஏற்படும் நீர்வீக்கம் மற்றும் பல தொல்லைகள் (Psor, Tub). 
·          வயிற்றில் காற்று உப்பிசத்தால் எரிச்சலான வலி ஏற்படும். பால் சாப்பிடுவதால் அல்லது உணவு அருந்தினால் வலி குறையும்.
·          அடிவயிற்றில் குழந்தை நகர்வது போன்ற உணர்வு இருக்கும் ( Croc, thuj).
·          நாட்பட்ட மலச்சிக்கல்; மலம் கடினமாகவும் , கருப்பாகவும்,காய்ந்தும் வெளியேற்றுவதற்கு சிரமாகவும் இருக்கும். சில சமயம் இரத்தம் கூட வெளியாகும் அத்துடன் ஆசனவாயில் அரிப்புடன் கூடிய எரிச்சலும் இருக்கும். இது மாதிரியான இரத்தப்போக்கை ஏற்ப்படுத்தும் மூல நோயிற்கும், இரத்தப்போக்கு இல்லாத குருட்டு மூலத்திற்கும் சல்பர் மிகச் சிறந்த மருந்து.
·          மலம் கழித்த ஒருமணி நேரத்திற்குப் பிறகு சூடுபிடித்து திரும்பவும் மலம் கழிக்க வேண்டும் என்று தோன்றும் ( Tenesmus) . அதேபோல் மலம் கழித்தபிறகு ஆசனவாயில் துடிப்பு அல்லது அதிர்வு இருக்கும். இவ்வுணர்வு நாள் முழுவதும் நீடித்திருக்கும்.
·          தோல் நோய்களை உள்ளமுக்கியதால் வயிற்றுப்போக்கு தோன்றுதல் (Petr). 
·          வயிற்றுப்போக்கு புளித்த வாடையில் இருக்கும்.
·          சிறுநீர் தொடர்ந்து வெளியாகும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியதாயிருக்கும். அத்துடன் சிறுநீர்ப் பையில் குச்சி இருப்பதுபோன்ற  உணர்வும் இருக்கும். சிறுநீர் பலவீனமாகவும் மெதுவாகவும் வெளியாகும் (Weak and Slow stream).  சிறுநீர் கழித்தபிறகு ஒருசில இரத்தத் துளிகள் வெளிப்படும்.
·          தாங்க முடியாத அரிப்பு; சூடான நீரில் குளித்தால் அதிகரிக்கும். சொரிந்தால் அரிப்பு இடம் மாறும்.
·          கோடைகாலத்தில் தோல் பகுதியில் குருதிக்கட்டிகளும், புண்களும் ஏற்படும். அந்தக் குருதிக்கட்டிகள் பல எண்ணிக்கைகளிலும் அல்லது ஒன்று தோன்றினால் தொடர்ந்து மற்றவைகளும் ஏற்படும் ( Tub)

IV.மனக்குறிகள்(Mind):

·          மதம் அல்லது தத்துவம் சம்பந்தமான விசயங்களிலே ஆழ்ந்திருத்தல்.
·          அறிவுத்திறனுடையவர் அல்லது ஆய்வறிவாளர் ( Intellectual) .
·          நுண்பொருள் ஆய்வுக் கோட்பாட்டியல் (Metaphysical) சார்ந்த நுட்பமான விசயங்களில் மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள்.
·          நம்பமுடியாத மாயத்தோற்றங்கள்( Fantastical Illusions) இவருக்குத் தெரியும். ஒற்றைக்கருத்தின் மீது வெறி (Monomania). கற்பனைத்திறன் வாய்ந்தவர்கள்.
·          தான் ஆசைபடும் ஒவ்வொரு பொருளும் மிக அழகாக இருப்பதாக துயரர் கூறுவார். அழுக்குப் படிந்த துணிகள் கூட அவருக்குப் பட்டாடை அணிந்திருப்பது போல் தோன்றும்.
·          தான் மிக உயர்ந்த மனிதன் அல்லது அரசன் என்று நினைத்துக் கொள்வார்.
·          அதிக ஞாபகமறதி. பேசும்பொழுது சரியான வார்த்தை ஞாபகத்திற்கு வராது. சொற்களை தவறான இடத்தில் உபயோகிப்பார்கள் (anac, lyc,med,rhus.t) .
·          அதிக சுயநலம் படைத்தவர்கள் ( puls), அடுத்தவர்களின் கருத்திற்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை.
·          கர்வம் அல்லது அகந்தை மனம் கொண்டவர்கள் (Calc,lach,sil,plat). காரணமில்லாமல் எதற்கெடுத்தாலும் அழும் குணம் (apis,puls) . சந்தேகமனப்பான்மை. சோம்பல்தன்மை . யாருடனும் அதிகம் பேசமாட்டார் ( phos,plat,puls). பிடிவாதக்காரர். யாரும் தன்னுடன் இருக்கவும் விரும்பமாட்டார்.
·          கடுகடுப்பான மனநிலை (Ill-humoured); தன்னையே குறைபட்டுக்கொள்வார்கள். மற்றவர்களிடமும் குற்றம் காணும் மனம் படைத்தவர் (Fault finding).
·          எந்த விசயமும் அவரை பெரிதும் பாதிக்காது. வேலை, பேசி மகிழ்வது  மற்றும் உடல்பயிற்சி போன்றவைகளை அவரால் உணர்ந்து மகிழ இயலாது.
·          வாழ்க்கையில்  சலிப்பு ஏற்பட்டதாலும் , மனத்துன்பங்கள்  மற்றும் வலிப்பு நோயாலும்  தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்ற தூண்டுதல் உணர்வு இருக்கும். நீரில் மூழ்கி சாக வேண்டும் அல்லது ஜன்னலில் இருந்து குதித்து சாக வேண்டும் என்று நினைப்பார்.
·          எந்தக் காரணமும் இல்லாமல் நாள் முழுவதும் சோகமாக இருப்பார்கள்.
·          எல்லா விசயங்களும் தனக்கு தெரிந்தது  போல்  பேசுவார். ஆனால் அவைகளை செயலில் காட்டத் தெரியாது.
·          உயரமான இடங்களின் மீது பயம் இருக்கும். குளிப்பதற்குப் பயம் (குழந்தைகள்)
·          மக்களுக்கு தவறான கருத்துக்களை கூறிவிட்டதால் தான் அவர்களது மரணத்திற்கு காரணமாகிவிட்டமோ என்று கற்பனை செய்து கொள்வார்.
·          தொந்தரவுகளினால் ( Vexations) கோபம் ஏற்பட்டு சண்டைபிடிக்கும் குணம் இருக்கும் (Quarralsome).

V.நோய்க்கான காரணங்கள் (Causation or Ailments from):

தோலில் ஏற்பட்ட சொறி,சிரங்கு மற்றும்  படை போன்ற நோய்களை வெளிப்புறத்தில் மருந்துகளைத் தடவி உள்ளமுக்கப்படுவதால்; அளவுக்கு அதிகமாக சிற்றின்பத்தில் ஈடுபட்ட நிலை; சுய இன்பப்பழக்கம் ; கழிவுகளை உள்ளமுக்கியதால் ஏற்பட்டப் பின்விளைவுகள்; மற்றும் அம்மைகுத்திக்கொண்ட பிறகு வரும் நோய்கள்.

VI.ஆண்கள் (Male):

விரைகளும், விரைப்பையும் தளர்ந்து தொள தொளவென்று தொங்கும். ஆண்குறி சில்லிப்பாக இருக்கும். ஆண்தன்மை குறைந்து  அபூர்வமாகவே    விறைக்கும். விந்து  வெளியாகும் போது  சிறுநீரை வெளித்தள்ளும்   இரத்த நாளங்களில் காந்தள் ( எரிச்சல்) இருக்கும்.    மிக விரைவில் விந்து வெளியாகிவிடும். பெண்களை தொட்டவுடன் விந்து வெளிவந்துவிடும். விந்து வாசனை இல்லாமல் தண்ணீர் போன்று இருக்கும். உடலுறவிற்குப் பிறகு இடுப்புவலியும் கை,கால்கள் பலவீனமாகவும் தோன்றும்; கூடவே வருத்தமும் எரிச்சலும் சேர்ந்திருக்கும். விரைவாதம் ( Hydrocele) . விரைகள் கெட்டித் தன்மையுடன் இருக்கும். ஆண்குறியின் நுனிப்பகுதி நெகிழ்வற்ற தன்மையுடன் தோல் போன்று கடினமாக இருக்கும்; அதனுள்ளே  ஏராளமான களிக்கசிவு ( Smegma ) ஏற்பட்டு கெட்ட நாற்றத்தை ஏற்படுத்தும் அதனால் அரிப்பும் இருக்கும்.


VII.பெண்கள் (Female):

மாதவிடாய்போக்கு ஒழுங்கற்று, நீண்ட நாட்கள் கழித்து வரும். போக்கு   காரத்தன்மையுடன் குறைவாக, கட்டியாக, கறுப்பாக இருக்கும் அத்துடன் உறுப்புகளில் புண் போன்ற வலி இருக்கும். மலட்டுத் தன்மையுள்ள பெண்களுக்கு மாதவிடாய் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பே ஏற்படும் மற்றும் ஏராளமாகவும் இருக்கும். வெள்ளைப்பாடு மஞ்சள் நிறத்தில் சளிபோன்று , எரிச்சல்த்தன்மையுடன்  பட்ட இடத்தை தோல் உரியச்செய்யும் வகையில் இருக்கும். முலைக்காம்புகளில் வெடிப்பும்கூர்மையான வலியும் அத்துடன் எரிச்சலும் இருக்கும். கடைசியாக கருச்சிதைவு ஏற்பட்டபிறகு மாதவிடாய் காலங்களில் ஒவ்வொரு தடவையும் ஏராளமான இரத்தபெருக்கு ஏற்படும் அல்லது தமது நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தோன்றும். அடிவயிற்றில் குழந்தை இருப்பது (போலியான கர்ப்பம்) போன்ற அசைவு இருக்கும் (Croc, Thuj). பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் விஷக்காய்ச்சலில் ( Puerperal septicaemia) உடல் முழுவதும் ஏராளமான வியர்வையும் , அடிவயிற்றில் வலியும், களைப்பும் தோன்றும். உயரமான பகுதிக்கு ஏறும்போது கருப்பை நழுவும். மார்பகம் மற்றும் கருப்பை போன்ற உறுப்புகள் சரியான அளவில் வளர்ச்சி இருக்காது அதாவது வளர்ச்சி தடைபட்டிருக்கும். மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய்.  கால்கள் வெளுத்து நீருடன் வீங்கி வலியெடுக்கும் ( Phlegmasia alba dolens=milk leg). பிறப்புறுப்பின் வெளிப்பகுதியில் மிகக் கடுமையான அரிப்பு அல்லது சொறி ( Pruritis Pudendi) இருக்கும்.

VIII.
குழந்தைகள் (Child):

அசுத்தமான , தூய்மையற்ற  குழந்தைகள். குளிப்பதற்கு விருப்பமின்மை. உடலை தண்ணீரில் கழுவவோ அல்லது குளிப்பதோ இவர்களுக்கு பிடிக்காது அல்லது தாங்க இயலாது ( (anti.c, am.c). பெரிய வயிறு ஆனால் கை,கால்கள் இளைத்து காணப்படும். கையில் கிடைத்த பொருள்களையெல்லாம் வாயில் போட்டுகொள்வார்கள். மற்றவர்கள் சாப்பிடுவதை உன்னிப்பாக கவனிப்பார்கள். உதடுகளும், உடம்பிலுள்ள அனைத்து துவாரங்களும் சிவந்த நிறத்தில் இருக்கும். இரவில் அமைதியற்றவர்களாக இருப்பார்கள்; குளிர்ந்த  பருவநிலையில் கூட தூக்கத்தில் உடலை மூடியுள்ள போர்வையை உதறித் தள்ளுவார்கள்.  காரணமே இல்லாமல் அழுவார்கள்; நன்றாக சாப்பிட்டாலும் உடல் இளைத்துக் காணப்படுவார்கள்; வியர்வை  கெட்ட நாற்றத்துடன் இருக்கும்; குடல் புழுக்கள் மற்றும் தோல் வியாதிகள் இருக்கும். மலம் அதிகமாகவும் வலியுடனும் வெளியாகும் அதனால் கழிக்கப் போகும் போது பயப்படுவார்கள் அல்லது அழுவார்கள். சில குழந்தைகளுக்கு காலையில் வலியற்ற, காரமான வயிற்றுபோக்கு ஏற்படும் அதனால் அவர்களது மலத்துவாரம் சிவந்து காணப்படும்.

IX.   உணவு (விருப்பம்,  வெறுப்பு ) மற்றும் தாகம் (Food and Drinks)

பசி இருக்காது அல்லது அதிகமாகப் பசிக்கும். குறைவான  உணவு எடுத்துக்கொள்வார்கள் ஆனால் அதிகம் தண்ணீர் குடிப்பார்கள். அளவிற்கு அதிகமான அமிலச்சுரப்பு; புளித்த ஏப்பம், அத்துடன் வயிற்றில் எரிச்சல் அல்லது காந்தள். காலை பதினோரு மணிகெல்லாம் வயிறு காலியான உணர்வு. கட்டாயம் சாப்பிட வேண்டும்.

விருப்பம்: இனிப்பு சாப்பிட  அதிக விருப்பம் ; மது பானங்கள்; ஆப்பிள்; குளிர்ந்த   பானங்கள்; பால்.
ஒத்துக்கொள்ளாது:  இனிப்பு; பால்; சமைக்கப்படாத அல்லது பச்சையான உணவுகள்; புளித்த ஆப்பிள்கள்
வெறுப்பு : ரொட்டி;கொழுப்பு மற்றும் ஊட்டமிக்க உணவுகள்; புகையிலை மற்றும் மாமிசம்.

X.மாறுமைகள்: (Modalities):
நோய்க்குறி அதிகரித்தல்(Aggravation):

உள்ளமுக்கப்படுதல்; பால்; அதிக உழைப்பதினால் ஏற்படும் உடல் சூடு; பேசுவதால் ; காலை 11 மணிக்கு; மாதவிடாய் நிரந்தரமாக நின்ற பிறகு; பௌர்ணமி (முழு நிலவு )  ; ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீர்க் கடக்கும் போது ; இனிப்புகள்; குனிவதால் மற்றும் நிற்பதால் ( Standing is worst position) ; படுக்கை சூட்டினால்; தண்ணீரில் குளிப்பதால் அல்லது உடலைக் கழுவுவதால் ; தட்பவெப்ப நிலையில் மாறுதல் ஏற்படும் போது ; உலோகங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட மருந்துகளை அளவிற்கு அதிகமாக உபயோகித்த பிறகு இவர்களுக்கு தொல்லைகள் அதிகமாகும்.

சல்பர் துயரருக்கு சூடு அல்லது வெப்பம் ஒத்துக்கொள்ளாது, ஆனால் அதே சமயத்தில் குளிரும் ஒத்துக்கொள்ளாது. திறந்த வெளிக்காற்றில் இருக்கும் போது நன்றாக இருப்பதாக உணருவார் ( உண்மை என்னவென்றால் சூடோ அல்லது குளிரோ இல்லாத மிதமான தட்ப வெப்ப நிலையை விரும்புவார்கள்). ஆனால் திறந்த  இடங்களில் இருக்கும் போது காற்று வீசினாலும் தொல்லைகளுக்கு உள்ளாவார்கள்; சுலபமாகச் சளிப்பிடிக்கும்.     

நோய்க்குறி குறைதல் (Amelioration):

வறண்ட, வெதுவெதுப்பான தட்பவெப்பம். திறந்த வெளிக்காற்றில் இருக்கும் போது நன்றாக இருப்பதாக உணருவார். இரவில் தான் இருக்கும் அறையிலுள்ள எல்லா ஜன்னல்களையும் திறந்து வைத்துக் கொள்ள விரும்புவார்கள். அசைவதால் அல்லது நடப்பதால்  மற்றும் வலது பக்கம் படுப்பதால் தொல்லைகள் குறையும். நன்றாக வியர்வை ஏற்பட்ட பிறகும் நலமாக இருக்கும்.

XI.
வீரியம்:

மருத்துவத்தைத் துவக்குவதற்கு சல்பரின் 12 C வது வீரியமே மிகவும் நல்லது.  அதன் பிறகு துயரர்  முழுவதுமாக நலமடையத் துவங்கிய பிறகு தேவைப்படும் பட்சத்தில் குறிகளுக்கு தகுந்தவாறு உயர்ந்த வீரியங்களை மேன்மேலும் கொடுக்கலாம். 

துயரரின் நோய் ஏற்புத்தன்மை  நன்றாக இருக்கும்பட்சத்தில் குறைந்த வீரியத்திலிருந்து உயர்ந்த வீரியம் வரை எல்லா வீரியங்களும் நன்றாக வேலைசெய்யும்.

நாட்பட்ட நோய்களுக்கு மருந்தளிக்கும் போது 200 C அல்லது அதற்கு மேற்ப்பட்ட வீரியங்களைப் பயன்படுத்த வேண்டும்.    

மூலம் போன்ற சில குறிப்பிட்ட நோய்களில் சல்பரை திரும்பத் திரும்பக் கொடுக்கலாம். ஆனால் நாட்பட்ட அல்லது உள்ளமுக்கப்பட்ட நோய்களை குணப்படுத்த உயர்ந்த வீரியம் கொடுத்துள்ள போது சல்பரை திரும்பவும் கொடுக்கக்கூடாது.

சல்பர் , 40  நாட்கள் முதல் 60 நாட்கள் வரை நன்றாக வேலை செய்யும் ( J.H.CLARKE).

எச்சரிக்கை அல்லது கவனம் தேவை: முற்றிய காசநோயில் சல்பரை உயர்ந்த வீரியத்தில் கொடுக்கக் கூடாது (J.T.KENT) . தூக்கமில்லாமல் சிரமப்படும் துயரர்களைத் தவிர மற்றவர்களுக்கு இரவில் கொடுக்கக் கூடாது. அதாவது தூக்கம் இல்லாத துயரர்களுக்கு இரவில் கொடுத்தால் தூக்கத்தை உண்டு பண்ணும் . CALC மற்றும் AUR மருந்துகளுக்குப் பிறகு இம்மருந்தை கொடுக்ககூடாதுஅது துயரர்களுக்கு கேடு விளைவிக்கும்.

XII.மருந்துகளுக்குள் உறவு./ஒற்றுமை(Relationship)/ ஒப்பீடு:
நட்பு மருந்துகள்:  acon, aloe, badiaga, nux-v, psor.
இம்மருந்திற்கு பின் நன்றாக வேலை செய்யும் மருந்துகள்: calc, psor.

கல்கேரிய.கார்ப் (CALC) மருந்திற்கு சல்பர்  முறிவு மருந்தாகும். ஆதலால் சல்பருக்குப் பிறகு தான் கொடுக்கவேண்டும். மெர்க்குரியஸ் மருந்திற்குப் பிறகு சல்பர் நன்றாக வேலை செய்யும். அதேபோல் Acon, aloe, nux-v, puls மருந்துகளுக்குப் பிறகும் நன்றாக வேலை செய்யும்.

ACON முற்றினால் SULPH தர வேண்டும்.. சுவாசகோச வேக்காட்டிலும் , உடனடி நோய் நிலையிலும் ACON மருந்திற்குப் பிறகு SULPH மிக நன்றாக வேலை செய்யும்.
சல்பர் மருந்து நலப்படுத்த தவறும்போது PSOR மற்றும் TUB மருந்துகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஒப்பீடு:
·          காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் வயிற்றுப்போக்கு:  aloe, psor,rumex.
·          இனிப்பு பதார்த்தங்களில் அதிக விருப்பம்: med.
·          பால் சாப்பிட்டதால் வயிற்றுப்போக்கு: calc, nat.c, nit-ac.
·          குளிப்பதில் வெறுப்பு: ant.c, clem, hep,rhux.t,sep,spig.
·          குழந்தைகளுக்கு குளிப்பதில் வெறுப்பு:  am.c, ant.c,
·          மலம் கழித்த ஒரு மணிநேரத்திற்குப் பிறகு ஆசனவாயில் எரிச்சல் மற்றும் கொட்டும் வலி: aesc, am.m
·          மலச்சிக்கல்; மலம் காய்ந்து கெட்டிபட்டு இருத்தல். Bry., Lac-def.
·          மலச்சிக்கல்; மலக்குடலில் உந்து சக்தி இல்லாததாலும், மலம் கழிக்கவேண்டும் என்ற உணர்வின்மையாலும் மலச்சிக்கல்: Bry., Op.
·          அடிவயிறு , கைகள், கர்ப்பப்பை, மற்றும் பல உறுப்புகளில் ஏதோ அசைவது போன்ற உணர்வு; croc.s, Sabina,thuj.
·          உச்சந்தலையில் எரிச்சல்: calc.,graph.
·          உடல் முழுவதிலும் எரிச்சல்: ars., phos.
·          உள்ளங்கைகையிலும், பாதங்களிலும்  எரிச்சல்: cham., lach., med., petr.,  phos.,puls., sang.
·          கைகள் மற்றும் பாதங்களில் ஏற்படும் எரிச்சலின் போது  அப்பகுதி குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற விருப்பம்: lach., med.
·          மாதவிடாய் நிரந்தரமாக  நிற்கும் காலங்களில் தொல்லைகள் ஏற்படுதல்: Lach., Murex., Sep.
·          மாதவிடாய் நிரந்தரமாக  நிற்கும் காலங்களில் தலைவலி: Lach., sang. 
·          நீண்ட கால நோய்களுக்கு மருத்துவத்தைத் துவக்குவதற்கு: alum., calc., puls.
·          படுக்கையில் குழந்தைகள் துணிகளை உதைத்துத் தள்ளுதல்Hep., sanic.
·          மதுபானத்தில் அதிக விருப்பம் மற்றும் நீண்டகாலக் குடிப்பழக்கம்: asar., psor., sulph-ac., tub.
·          திறந்த வெளிக்காற்றை விரும்பி ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்து வைத்துக் கொள்ள விருப்பம்: amyl.n., arg.n., lach., puls. 
·          வயிறு காலியாக இருக்கும் போது தொல்லைகள் அதிகரிக்கும்; ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிட வேண்டும்இல்லாவிட்டால் பதட்டம் ஏற்ப்படும்.cina., iod.
·          தூக்கத்திலிருந்து எழும் பொழுது நன்றாக தூங்கிய உணர்வு இல்லாமலும், களைப்புடனும் எழுதல்: bry.,con., mag.c., op.
·          நடு இரவில் பசி. கட்டாயம் ஏதாவது சாப்பிட வேண்டும்cina., lyc., psor.
·          ஆண்குறி சில்லிட்டுத் தளர்ந்து விறைப்பு இல்லாமல் இருத்தல்: calad., lyc., nat.m.
·          நுரையீரலும் , கல்லீரலும் சேர்ந்து நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் தன்மை: calc., lyc., phos.
·          ஓடும் தண்ணீரைப் பார்த்தவுடன் சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற விருப்பம்: canth., lyss.
·          துயரர்கள் நலமடையத் துவங்கிய சில நாட்களுக்குப் பிறகு நலமடைவதில்  தடை ஏற்பட்டு நின்று விடுதல்: caust., psor.