Monday 7 October 2019

ஸ்ட்ராமோனியம்


ஸ்ட்ராமோனியம்
STRAMONIUM (STRAM)
பிரிவு: தாவரம்
நிரூபணம் செய்தவர் :  மரு.ஹானிமன்





1.    முன்னுரை (Introduction) :

 இம்மருந்து சோலனேசியா ( SOLANACEAE) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது . தமிழில் ஊமத்தை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இத்தாவரம் வளர்கிறது. மொத்தம் 25  வகை ஊமத்தை உள்ளது. அதில் இந்தியாவில் மட்டும் இரண்டு வகை ஊமத்தை (FASTUOSA & ALBA) உள்ளது. இத்தாவரத்தில் வெடியக்கலப்புடைய வேதியல் மூலப்பொருள்(ALKALOID  ) இருப்பதால்  மிகவும் நச்சுத் தன்மை வாய்ந்தது.  இந்த நச்சுத்தன்மை முதலில் மூளையையும் பிறகு மற்ற உறுப்புகளையும் தாக்குகிறது.

இந்த ஊமத்தையில் ஹயோசியாமைன் (hyoscyamine) மற்றும் அட்ரோபின் (atropine) என்ற இரண்டு வகை நச்சுப்பொருள்கள் சேர்ந்திருப்பதாக பேராசிரியர். லேண்டன்பர்க் (PROF. LANDENBURG) குறிப்பிடுகிறார். இம்மருந்து முற்றிய ஊமத்தை விதைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது.  கசப்பு மற்றும் காரத்தன்மை உடையது.


ஸ்ட்ராமோனியம் மனதிலும் , உடலிலும் மிக்க கடுமையான(violent) நோய்குறிகளை உண்டாக்குகிறது. “ஸ்ட்ராமோனியம் ஒரு பூகம்பத்தைப் போலவே கடுமைக்குணம் பொருந்தி இருக்கிறது” என்று மரு. J.T. கெண்ட் குறிப்பிடுகிறார்.

ஸ்ட்ராமோனியம் மனித உடலில் கீழ்காணும் மூன்று நிலைகளில் செயலாற்றுகிறது என்று விளக்குகிறார் மரு. என்.எம். சௌத்திரி (N.M.CHOUDHIRI).

முதல் நிலை: பிதற்றல், மனஅமைதியின்மை, தசைகளில் வலி மற்றும் தலைசுற்றல். துயரரால் நிற்க முடியாது ; சம்பந்தமில்லாமல் பேசுவார், கட்டுப்பாடு இல்லாமல் சிரிப்பார், கற்பனையில் பிசாசை பார்த்து மிரண்டு ஓடுவார், காற்றில் எதையாவது பிடிப்பது போல் செய்வார். மற்றும் படுக்கைத் துணியை சுருட்டுவார் . கோமாளித்தனமான செய்கைகளிலும் ஈடுபடுவார்.

இரண்டாவது நிலை: பிதற்றலினால் களைத்து  முழுமையான அரைத்தூக்க அல்லது அயர்வுநிலைக்கு சென்றுவிடுவார் (DROWSINESS). மயக்கம் (STUPOR) , உணர்விழந்தநிலை(INSENSIBILITY) மற்றும் மூச்சு விடும் பொழுது குறட்டை ஒலி போன்ற சுவாசம் இருக்கும் ( STERTOROUS BREATHING).

மூன்றாவது நிலை: இழந்த சுயநினைவு  மெதுவாக திரும்பி வரும் அல்லது உணர்விழந்தநிலை மேலும் ஆழமான நிலைக்குச் செல்லலாம், அதனால் துயரர் மெதுவாக இறப்பை நோக்கிச் செல்வார்

ஸ்ட்ராமோனியம்,  சித்தபிரமை அல்லது பிதற்றலை நலமாக்கும் ( DELIRIUM)  மூன்று முக்கிய மருந்துகளில் இறுதியானது. மற்ற இரண்டு மருந்துகள் ;  பெல்லடோன்னா மற்றும் ஹயோசியாமஸ் .

மிகவும் நச்சுத்தன்மை கொண்ட இத்தாவரத்தை தமது உயர்ந்த அறிவுத் திறனால்   நிரூபணம்  செய்து மனித குலத்திற்கு என்றும் பயன்படும் வகையில் , (குறிப்பாக மனநோய்களை குணமாக்கும்) ஒரு நல்ல மருந்தாக  கொடுத்துள்ளார் மாமேதை .ஹானிமன்.


2.    இம்மருந்து வேலை செய்யும் உடல்பகுதிகள் (REGION OR AFFINITIES):

மூளை (BRAIN), நரம்பு மண்டலம் (NERVOUS SYSTEM), முதுகு தண்டுவட நரம்புகள் [SPINAL NERVES(ARMS, LEFT HIP)],  சுற்றோட்டம் அல்லது சுழற்சி ( இரத்தஓட்டம் - CIRCULATION), தசைகள் (MUSCLES) மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் (SEX ORGANS). தோல் மற்றும் சளிச்சவ்வுகள்.

3.    மனக்குறிகள்(Mind):

1.       பயம் (FEAR); சுலபத்தில் பயந்து விடுவார்கள். இருட்டு மற்றும் சுரங்கப்பாதை போன்றவற்றிக்குப் பயம். நாய் கடித்து விடும் அல்லது தாக்கும் என்ற பயம். பயமும் , அச்சமும் (கிலி) இம்மருந்தின் திறவு கோல் குறியாகும்.

2.       பயம்: சாவு, இருட்டு, தண்ணீர்; தலையில் தண்ணீர் பட்டாலோ அல்லது ஓடும் தண்ணீர். தனிமை (குறிப்பாக இரவில் அல்லது இருட்டில் ) மற்றும் மிருகங்கள்.

3.       ஒதுக்கிடம் என்றாலே அச்சமுண்டாகும்  கோளாறு (CLAUSTROPHOBIA). திறந்தவெளி கண்டு இயற்கை மீறிய பேரச்சம் (AGORAPHOBIA). வெறிநாய்க்கடி அல்லது நீர் அச்ச நோய் (HYDROPHOBIA).


4.       வெளிச்சத்தின் மீது பேரார்வம் ( இருட்டின் மீதுள்ள பயத்தினால்). இருளில் இவர்களால் தூங்க இயலாது; அறையின் மூலையில் சிறிதளவு  வெளிச்சம் இருக்க வேண்டும். அதனால் விளக்கு எரிய  வேண்டும்.


5.       தனியாக இருக்க பயம். யாருடனாவது சேர்ந்திருக்க விரும்புவார்கள்; இவர்களால் தனித்திருக்க இயலாது குறிப்பாக இரவில்.


6.       பித்துப்பிடித்த நிலை: முகம் சிவந்திருக்கும்; கண்விழிகள் விரிந்திருக்கும்; உடலில் மனிதசக்திக்கு அப்பாற்பட்ட பலம் உண்டாகும்.

7.       அமைதியாக உட்க்கார்ந்திருப்பார்கள்; கண்விழிகள் தரையை பார்த்திருக்கும்; தான் உடுத்தியிருக்கும் ஆடையை பிடித்து இழுப்பார்கள் அல்லது சுருட்டி கொண்டிருப்பார்கள்.

8.       அருகில் இருப்பவர்களை பற்றிக் (CLINGING)கொள்வார்கள் .

9.       சந்தேகப்புத்தி (SUSPICIOUS).

10.    பொறாமை( JEALOUSY). கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுவார்கள்.

11.    அழிக்கக்கூடிய எண்ணம் (DESTRUCTIVE). கொலை செய்யும் எண்ணம்.

12.    கட்டுக்கு அடங்காத ஆத்திரம்; கடிக்கவும்,  அடிக்கவும், கழுத்தை நெறிக்கவும் , கொல்லவும் விரும்புதல்.

13.    பலமாக (LOUD) அல்லது வஞ்சகமாக(CRUEL)  அல்லது மூர்க்கவெறிகொண்டு(WILD)   சிரிப்பார்கள்.

14.    கற்பணைகளின் மூலம் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்.

15.    வாயாடித்தனம் அல்லது இடைவிடாது பேசுதல் (LOQUACITY) : புத்தித் தடுமாற்றத்திலும் , பைத்தியம் பிடித்த போதும் வாய் ஓயாமல் பேசுதல். இடைவிடாது பேசிக் கொண்டிருக்க விரும்புதல். ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் பேசுவார். சிரிப்பார், கைகளைத் தட்டுவார்.மாதவிடாயின் போது அதிகம் பேசுவார்.

16.    தெரியாத அந்நிய மொழியில் பேசுவார்கள். சிலசமயம் பேச மாட்டார்கள்.


17.    கடவுளைத் துதிக்கும் குணம் (PRAYING) : கண்களில் நீர் பெறுக கடவுளைத் துதிப்பதும்  உள்ளம் உருக அடிபணிந்து வேண்டிக்கொள்ளவும் செய்வார். இரவில் முட்டி போட்டுகொண்டு வேண்டுதல்  செய்வார்; குறிப்பாக பெண்கள் மாதவிடாய் உள்ளமுக்கப்பட்டு இருக்கும் போது இவ்வாறு செய்வார். பைபிள் அல்லது பக்தி நூல்களை வாசித்துக் கொண்டேயிருப்பார்கள்.


18.    ஆன்மிகச்சிந்தனைகளும் , சிற்றின்ப ஆர்வமும் மாறி மாறி தோன்றும்.

19.    காமவெறி: ஆண், பெண் இருபாலருக்கும் சிற்றின்ப ஆசை அதிகரித்து விடும். பாலியல் உணர்வு மிகுதியால் மனஎழுச்சி ஏற்படும்; பிறப்புறுப்புகளை மூடியுள்ள ஆடைகளை அடிக்கடி விலக்கிக் கொள்வார்; ; அவற்றை கைகளால் பிடித்து இருப்பார் அல்லது பிசைவார். ஒழுங்கீனமான பேச்சு . அசிங்கமான பாட்டுக்கள் பாடுவார், 

20.  பிதற்றல் (DELIRIUM) , சீற்றம்(FURIOUS) .பிதற்றலின் போது அதிகப்படியான பலம் ஏற்பட்டு இவரைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமாக இருக்கும். பிதற்றலின் போது தப்பி ஓட விருப்பம் (பெல்லடோன்னா , பிரையோனியா, ரஸ்டாக்ஸ்). ஒளிந்து கொள்வார் (HIDE).


21.    மனஅமைதியின்மை (RESTLESSNESS) ; ஓடவேண்டும் என்று தோன்றும்.

22.    மற்றவர்கள் முகத்தில் துப்புவார்கள்(SPITTING).

23.    மிகையான இயக்கம் ( HYPER-ACTIVE) உள்ள குழந்தைகள். ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள மாட்டார்கள்.

24.    குழந்தைகளை கண்டிக்கும் போது கண்விழி விரியும்.

25.    மாயத்தோற்றங்கள் அல்லது பொய்த் தோற்றங்கள் (ILLUSIONS : HALLUCINATIONS): தன் உடல் பெரியதாகி (TALL) விட்டது போல்; தன்  உருவம் எப்படியோ மாறி விட்டது போல்; தன் உறுப்புகளில் ஒன்று இரண்டாக இருப்பது போல் அல்லது தன் உடலின் ஒரு பாதியை வெட்டி எரிந்து விட்டது போன்ற மாயத் தோற்றங்கள் ஏற்படும். மற்றும் தலை வெடித்து சிதறிப் போய்விட்டது போலவும் தோன்றும். பயங்கரமான தோற்றங்கள் ; எலிகள், பூனைகள், நாய்கள் மற்றும் பல பிராணிகள் எல்லா இடங்களிலும் இருப்பது போல் தோன்றுதல். பூதங்களையும் (GHOSTS) , பிசாசுகளையும் (DEVILS) காண்பதாகவும் அவை பேசுவது காதில் கேட்பதாகவும் அவைகளுடன் தான் பேசுவதாகவும் சொல்வார்; குறிப்பாக இருட்டில்.

26.    திக்குவாய் (STAMMERING); திக்கித் திக்கிப் பேசுவார். பேச்சில் புத்திசாலித்தனம் இருக்காது, மிகவும் முயற்சி எடுத்துப் பேசுவார். (திக்குவாயும், வலிப்பும் சேர்ந்திருந்தால் ஸ்ட்ராமோனியமே மருந்து).

27.    நகைச்சுவையாக பேசுவார்கள் ஆனால் அருவருப்பானதாக இருக்கும் (HYOS).

28.    மனிதர் மற்றும் விலங்கு போல் ஒலியெழுப்பும் கலை (MIMICRY) இவர்களுக்கு இருக்கும் ( குரல்கள், அசைவுகள் மற்றும் விலங்குகளின் செய்கைகள் ). 

29.    ஞான திருஷ்டி ( CLAIRVOYANCE) அல்லது கட்புலனுக்கு அகப்பட்டவற்றைக் காணும் திறனுடையவராக இருப்பார்.

30.    தண்ணீரைக் கண்டாலோ அல்லது பிரகாசமாக மின்னும் பொருளைக் கண்டாலோ இவர்களுக்கு இழுப்பு (SPASMS)  ஏற்படும்.

31.    தூக்கத்தில் நடத்தல் (SOMNAMBULISM).

32.    கணவன் தன்னை புறக்கணிப்பதாக மனைவியும், மனைவி தனக்கு உண்மையுடன் நடந்து கொள்ளவில்லை என்று கணவனும் நினைத்துக் கொள்வார்கள் (HYOS).

4.    சிறப்பியல்புக்குறிகள் (Characteristic Symptoms) :

i.                     இளமைப்பருவமும் , அதிக இரத்தப் பெருக்கமும் உள்ளவர்களுக்கு முக்கியமாக சிறுவர்களுக்கு உண்டாகும் கோளாறுகள்( முகத்தசை துடிப்பு , பைத்தியம் மற்றும் பிதற்றலுடன் காய்ச்சல்),

ii.                    வலியில்லாத தன்மை (PAINLESSNESS) என்பது ஸ்ட்ராமோனியத்தின் முக்கிய சிறப்பியல்பு குறியாக இருக்கிறது . பொதுவாக வலியை  தரும்  எல்லா நோய்களிலும் வலி இருக்காது.

iii.                  சுரப்புகளும் (SECRETIONS) , கழிவுகளும் (EXCRETIONS) உள்ளமுக்கப்பட்டிருக்கும்; மலமும் அல்லது  சிறுநீரும் வெளியேறாது.


iv.                  பிடிப்புகள் (SPASMS) , வலிப்புகள் (CONVULSION), முகத்தசைதுடிப்பு. CHOREA).  வேகமாக கண்ணிமைக்கும் பழக்கம் (TICS). தசைத்துடிப்பதிர்ச்சி (JERKS). உருக்குலைவு அல்லது கோணிக் கொள்ளுதல் (DISTORTION).

v.                    தொண்டை , குரல்வளை ஆகியவைகளில் வலிப்பு. விழுங்குவது சிரமமாக இருக்கும்.

vi.                  வலிப்பு ; வெளிச்சத்தினால் , பிரகாசமான ஒளியைப் பார்ப்பதால் அதிகமாகும்.

vii.                 பீதி , அடக்கப்பட்ட கோபம் , தலை காயம், தடுப்பூசி , காய்ச்சல் , மற்றும் பெருமூளை காயம் இவற்றிற்குப் பிறகு தொல்லைகள் ஏற்படும்.

viii.               பிதற்றலின் போது துயரர் படுக்கையிலிருந்து (தலையணை) தலையை தூக்குவார் , முடியாததால் திரும்பவும் தலை தாழ்ந்து விடும்.

ix.                  தலையணையிலிருந்து தலையை தூக்கியவுடன் வாந்தி எடுத்தல். வாந்தி சளி மற்றும் பச்சை பித்தத்துடன் வெளியாகும்.

x.                    தலைவலி : அதிர்ச்சி, சூரிய வெப்பம் அல்லது பீதியினால் தலைவலி உண்டாகும். தலையின் முன்பக்கமும் , புருவத்தின் மீதும் தாங்கமுடியாத வலி இருக்கும்.

xi.                  ஒருபக்கம் வலிப்பும், மறுபக்கம் பாரிசவாதத்துடன் இருத்தல்.

xii.                 வலிப்பின் போது  உணர்வு நிலையில் இருப்பார்கள்( NUX-V)

xiii.               பேரச்சம் அல்லது கிலி ஏற்படும் போது இரத்தம் தலைக்கு வேகமாக பாயும். அதனால் முகம் சிவந்து சூடாக காணப்படும்.. கை , கால்கள் சில்லிப்புடன்  இருக்கும்


xiv.               மாறுகண் அல்லது பக்கவாட்டுப் பார்வை (SQUINT).

xv.                 தூக்கத்தில் கண்கள் பாதியாக திறந்திருக்கும்.

xvi.               தூக்கம்: உணர்விழந்த நிலை (COMATOSE).

xvii.              இனிப்பு பண்டங்களின் மீது விருப்பம்.

xviii.            தண்ணீரைக்  கண்டால்   அச்சம் அல்லது நடுக்கம் (HYDROPHOBIA).. தண்ணீர் மீது அளவு கடந்த வெறுப்பு.

xix.               கடுமையான டைபாய்டு காய்ச்சல். இரத்தப்பெருக்குடன் கடுமையான வலிப்புகள். கடுமையான நீர்க்கோவை சம்பந்தமான வேக்காடுகள். விஷத்தன்மை வாய்ந்த , இரத்தத்தில் விஷம் கலந்த நிலமைகள். கடுமையான வியர்வை.

xx.                 காய்ச்சலின் போது முகம் சிவந்து , உடல் முழுவதும் குளிராக இருக்கும்; சிறுநீர் தடைப்பட்டிருக்கும். உடல் முழுவதையும் போர்த்திக் கொள்ள விரும்புவார். காய்ச்சலின் போது தாகமும் வாந்தியும் இருக்கும்.

xxi.               எல்லா அசைவுகளும் (MOVEMENTS)  மிக வேகமாக நடைபெறும் . எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடுவார். முகத்தசை துடிப்பின் போது முதுகெலும்புப் பகுதியிலும் மற்றும் உடல் முழுவதும்  விட்டு விட்டு துடிப்புகள் ஏற்படும். அத்துடிப்புகளால் பலவிதமான அருவருக்கத்தக்க அல்லது விசித்திரமான  அசைவுகளும் (GROTESQUE) , சைகைகளும் காணப்படும்.

xxii.              நடுக்குவாதம் (PARKINSON DISEASE).

xxiii.            கை , கால்கள் உடலிலிருந்து பிரிந்து தனியாக இருப்பது போன்ற உணர்வு.

xxiv.            தொல்லைகள் குறுக்குவெட்டாக தோன்றும். உடலின் மேல் பகுதியில் இடது பக்கமும், கீழ் பகுதியில் வலது பக்கமும் தாக்கப்படும்.


xxv.           திக்குவாய் (STAMMERING); திக்கித் திக்கிப் பேசுவார். பேச்சில் புத்திசாலித்தனம் இருக்காது, மிகவும் முயற்சி எடுத்துப் பேசுவார். (திக்குவாயும், வலிப்பும் சேர்ந்திருந்தால் ஸ்ட்ராமோனியமே மருந்து).

xxvi.         பிடிவாதமான விக்கல்.


xxvii.           முகத்தைக் கோணிக் கொள்ளுதல் (DISTORTS) (BOV., IGN., SPIG).

xxviii.         தாடைகள் கெட்டியாக பிடித்துக் கொள்ளும் நோய் (LOCK-JAW).

xxix.            கை,  கால்களில் கூச்ச உணர்வு(TINGLING).

xxx.              காய்ச்சலின் போது வியர்வை எண்ணெய் போல் ஓட்டும் குணமுள்ளதாகவும் , நாற்றமுடையதாகவும் இருக்கும்.  கை, கால்கள் மிகவும் குளிர்ச்சியாக (சில்லிப்பாக) இருக்கும்.

xxxi.            வயதான ஆண்களுக்கு சிறுநீர் மெதுவாக வெளியாகும்.

xxxii.           மாதவிடாயின் போது பெண்ணின் உடலிலிருந்து கடுமையான நாற்றம் வீசும்.

xxxiii.         வலியில்லாத வயிற்றுப்போக்கு ஏற்படும். மலம் கறுப்பாகவும் , நாற்றத்துடன் வெளியாகும்.




5.    நோய்க்கான காரணங்கள் (Causation or Ailments from):

அதிர்ச்சி மற்றும் அதிர்ச்சியினால் ஏற்பட்ட விளைவுகள்.   பீதி , சூரியன்( சூரிய வெப்பம்) , குழந்தை பிறப்பு , கழிவுகள் உள்ளமுக்கம் ( மாதவிடாய், சிறுநீர் இன்னபிற). சுயஇன்பம் . அளவிற்கு மீறி படித்தல். வயதான ஆண்களுக்கு சிறுநீர் மெதுவாக வெளியாகும்


6.    ஆண்கள் (Male):

ஆண்களுக்கு பாலியல் உணர்ச்சி மேன்மையாக இருக்கும், ஆபாசமான பேச்சும் மற்றும் செயல்களும் இருக்கும். அவர்களது கைகள்  எப்போதும் ஆண்குறியை பிடித்துக்கொண்டிருக்கும்.


7.    பெண்கள் (Female):

மாதவிடாய் இருக்கும் காலத்தில் வாயாடித்தனம் அல்லது அதிகம் பேசுதல். மாதவிடாயில் இருக்கும் சமயத்திலும் ,  உள்ளமுக்கப்பட்டிருக்கும் போதும் கடவுளை வணங்குதல் அல்லது பிரார்த்தனை செய்தல். பிள்ளைப்பேற்றின் விளைவாக ஏற்படும் காய்ச்சலின் போதும் பிரார்த்தனை செய்வார்கள். தனது உடல் இரண்டு அல்லது மூன்று மடங்காக இருப்பது போன்ற மனப்பிரமை  இருக்கும். அதேபோல்  படுக்கையில்  தன்னுடன் யாரோ ஒருவர் இருப்பதாகவும் மனப்பிரமை இருக்கும்.

மாதவிடாய் அல்லாமல் இரத்தப்போக்கு இருக்கும் போதும் ( metrorrhagia) மிக அதிகமாக பேசுதல், பாடுதல் மற்றும் பிராத்தனை செய்தல். இயற்கைக்கு மீறிய காமவெறி இருக்கும் (NYMPHOMANIA),  காமவெறி பேச்சு ( LEWD TALK) மற்றும் ஆபாசமான பாடல்களைப்  பாடுவார்கள். மாதவிடாயின் போது பெண்ணின் உடலிலிருந்து கடுமையான நாற்றம் வீசும்

 பிள்ளைப்பேற்றின் போது பித்துப்பிடிக்கும் , மனக்குறிகள் அதிகம் தோன்றும் மற்றும் ஏராளமான வியர்வையும் இருக்கும். பிள்ளைப்பேற்றிற்குப் பிறகு வலிப்பு ஏற்படும்.

8.    குழந்தைகள்(Children):

குழந்தை சத்தமாக பேசும் போதும் அல்லது தொடும் போதும்  மரப்பலகை போல் விறைப்பாக இருக்கும் . கரகரப்பான குரலில் அலறும்; இருட்டாக இருக்கும் அறையில் தூங்க செல்லாது, ஆனால் வெளிச்சமான அறையில் உடனடியாகத் தூங்கி விடும். மிகவும் சிடுசிடுப்பாகவும் , அடிக்கவும் மற்றும் கடிக்கவும் செய்வார்கள்.

குழந்தைகளுக்கு மதம் சம்பந்தமான  மனப்போக்கும் இருக்கும். தூக்கத்தில் பற்களை கடிக்கும் (அரைக்கும்) . சிறுவர்கள் தனது ஆண்குறியை எப்போதும் பிடித்து  இழுத்து விளையாடுவார்கள்.

குழந்தைகளை கண்டிக்கும் போது கண்விழி விரியும்.

குழந்தைகளுக்கு நினைவு தவறி , தான் எங்கே இருக்கிறோம் என்பது புரியாமல், பெற்றோர்கள் அருகில் நின்று தேறுதல் சொல்லிக் கொண்டிருந்தாலும் , " அப்பா,  அம்மா"  என்று கூப்பிடும்.

9.    உணவு, ( விருப்பம், வெறுப்பு ) மற்றும் தாகம் (Food and Drinks):

புளித்த பானங்களில் அதிகமான விருப்பம். அமில உணவுகளில் விருப்பம். எல்லா திரவ உணவுகளில் வெறுப்பு,


10.   மாறுமைகள்: (Modalities):

நோய்க்குறி அதிகரித்தல்(Aggravation):

பயம் மற்றும் பீதி; தனியாக மற்றும் இருட்டில் இருக்கும் போது தொல்லைகள் அதிகரிக்கும். இவர்களால் இருட்டில் நடக்க முடியாது. பிரகாசமான வெளிச்சம், பளபளவென்று ஒளி வீசும் பொருள்களை பார்த்தால் தொல்லைகள் கூடும் . அசைவுகள் ( வலிப்புகளை மீண்டும் தோன்ற செய்யும்). தூங்கிய பிறகு (APIS., LACH., OP., SPONG) தொல்லைகள் அதிகரிக்கும்.  விழுங்குவதற்கு முயற்சிக்கும் போது குறிப்பாக திரவங்கள். தொடுவது இவர்களுக்கு பிடிக்காது. வரம்புமீறிய செயல் அல்லது தன்னடக்கமின்மை (INTEMPERANCE).

நோய்க்குறி குறைதல்(Amelioration):

வெளிச்சம் (LIGHT) , பிறருடன் சேர்ந்திருத்தல் (COMPANY). வெதுவெதுப்பான நிலை (WARMTH). குளிர்ந்த தண்ணீர்.


11.  இம்மருந்துக்கான  உட்கரு:  (Nucleus):

I.                     பயத்தை ஏற்படுத்தும் வன்முறை செயல்கள்.
II.                    கடுமையான பயங்கள்.
III.                  இருட்டில் தொல்லைகள் அதிகரித்தல். வெளிச்சத்தில் தொல்லைகள் குறைதல்.
IV.                 தனிமையில்  தொல்லைகள் அதிகரித்தல். மற்றவர்களுடன் சேர்ந்திருக்கும் போது  தொல்லைகள் குறைதல்.
V.                   உள்ளமுக்கப்பட்ட கழிவுகள்.
VI.                 விட்டுவிட்டு இசிப்பிற்கு ஆட்படும் தன்மை, திரும்பத்திரும்ப ஏற்படும் வலிப்பு.


12.            உடனடி அல்லது துரித நோய்களிகளில் (ACUTE) ஸ்ட்ராமோனியம் :

i.                     திடீர் நோய்த்தாக்குதலின் போது துயரரின் முகம் மந்தமாகி, (பொலிவிழந்து ) பதட்டமும் மற்றும் பயமும் கலந்து நோய்வாய்ப்படுவார்.
ii.                    ஒரே தலைப்பில் பாடவும் அல்லது பேசவும் செய்வார்.
iii.                  எப்போதும் ஒருவரிடமும் சேர்ந்திருக்க வேண்டும்; மற்றவர்களை பற்றிக் கொள்வார்.
iv.                  பயம்: இருளில் பயம் ; பிரகாசமாக வெளிச்சத்திற்கும் அச்சம்.
v.                    முகச்சுளிப்பு (FROWN) செய்வார்.
vi.                  குளிர்ந்த உடல் மற்றும் தாகமும் இருக்கும்.


13.    வீரியம் (POTENCY): 6 முதல் 200 வரை. மிக உயர்ந்த வீரியங்களையும் பயன்படுத்தலாம்.

திடீர் நோய்த்தாக்குதலின் போது தாய்த் திரவத்தில் 5 முதல் 10 சொட்டுகள் வரை தினமும் மூன்று வேலை கொடுக்கலாம் என்று மரு. வில்லியம் போயரிக் (WILLIAM BOERICKE) குறிப்பிடுகிறார். நாட்பட்ட நோயை குணப்படுத்தும் போது இம்மருந்திற்கு முன்னால் அத்துயரரின் உடல்தகுதிக்கு உகந்த  அல்லது மியாசத்திற்கு தகுந்த மருந்தைக் கொடுத்த பிறகு இம்மருந்தைக் கொடுக்க வேண்டும். 

மிகத் தீவிரமான பிதற்றலில் 200  வது வீரியத்தை விட 30  வது வீரியம் நன்றாக செயல்பட்டது என்று மரு. பாஞ்சா ( K.C. BHANJA) குறிப்பிடுகிறார்.

மருந்து வேலைசெய்யும் காலம் (DURATION OF ACTION): மிகக் குறுகிய காலமே இம்மருந்து வேலை செய்யும் ( 1 முதல் 7 நாட்கள் வரை) .


மருந்தை திரும்பக் கொடுத்தல் (REPETITION) : மிகக் குறுகிய காலமே இம்மருந்து வேலை செய்யும் ( முதல் வரை) , அதனால் திடீர் நோய்த் தாக்குதலின் போது அடிக்கடி கொடுக்கலாம். ஆனால் மருந்து வேலை செய்ய ஆரம்பித்த பிறகு திரும்பத் தருவதை நிறுத்திவிட வேண்டும்.


நிறைவு செய்யும் மருந்து (COMPLEMANTORY) : பெல்லடோன்னா, ஹயாசியாமஸ் மற்றும் ஓபியம் போன்ற மருந்துகள் இம்மருந்திற்கு ஒத்தமருந்துகள் . அதனால் இம்மருந்துகளில்  தகுந்த ஒன்றைக் கொடுக்கலாம்.


14.  மருந்துகளுக்குள் உறவு ./ ஒற்றுமை(Relationship):

I.                     பிரகாசமான ஒளியினால் வலிப்புகள் உண்டாகுதல்: KALI-BR
II.                    கைகள் இடைவிடாது பிறப்புறுப்பைத் தொட்டுக் கொண்டிருத்தல்: zinc.
III.                  தூங்கிய பிறகு தொல்லைகள் அதிகரித்தல்: APIS., LACH., OP., SPONG.
IV.                 தூக்கக் கலக்கமாக இருந்தாலும் தூங்க முடியாமை: BELL., CHAM., OP.
V.                   தனியாக இருக்க முடியாமை: ARS., BISM., HYOS., KALI-C., LAC-C., LYC., PHOS.
VI.                 வெளிச்சமான இடத்தில இருப்பதையும் , பிறருடன் சேர்ந்திருப்பதையும் விரும்புதல்: BELL., CALC., GELS., LAC-C.
VII.                குழந்தைகள் தூக்கத்திலிருந்து திடீரென்று எழுதல்; கதறுதல்  மற்றும் தொட்டிலைப் பிடுத்துக் கொள்ளுதல். APIS., BORAX.,BOV., CINA.,KALI-BR.
VIII.               பெரும்பாலான தொல்லைகளில் வலி இல்லாத தன்மை: OP.
IX.                 தொடர்ச்சியாக பேசுதல் : CIC., LACH.

X.                   வெறிநாய்க்கடி அல்லது நீர் அச்ச நோய் (HYDROPHOBIA). ARS., BELL., CANTH., HYOS., LYSS.
XI.                 திக்குவாய் (STAMMERING) குழந்தைகள் : BOV., IGN., SPIG.
XII.                கடவுளைத் துதிக்கும் குணம் (PRAYING) :AUR., PULS., VERAT.
XIII.              பேய், பிசாசுகள் , ஒளிந்திருக்கும் உருவங்கள் மற்றும் மிருகங்களைப் பார்ப்பதாக கூறுதல்:  BELL.
XIV.             மனக்கோளாறுடன் அதிகம் பேசுதல்: AGAR., LACH.
XV.               தொல்லைகள் குறுக்குவெட்டாக தோன்றும். உடலின் மேல் பகுதியில் இடது பக்கமும், கீழ் பகுதியில் வலது பக்கமும் தாக்கப்படும்: AGAR., ANT-T., LED.
XVI.             வலிப்பின் போது  உணர்வு நிலையில் இருப்பார்கள்: NUX-V., உணர்வற்ற நிலை: BELL., CIC., HYOS., OP.

3 comments:

  1. புத்தகமாக வெளியிட்டுள்ளீர்களா சார்...

    ReplyDelete
  2. தங்களின் மருந்துக்கான மனகுறிகள் மற்றும் நோய் குறித்த விபரங்கள் பயனுள்ளதாக இருக்கிறது.

    ReplyDelete
  3. விரிவாகவும் விளக்கமாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ள எளிதாகவும் உள்ளது. நன்றி சார்.
    இதைப்போன்ற பயனுள்ள கட்டுரைகளை தங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete